தமிழ்நாடு

tamil nadu

Varahi Amman: தஞ்சாவூர் பெரியகோயில் வாராஹி அம்மனுக்கு தேங்காய் பூ அலங்காரம்!

By

Published : Jun 23, 2023, 10:56 AM IST

Updated : Jun 23, 2023, 5:07 PM IST

தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழாவில் தேங்காய் பூ அலங்காரம் செய்யப்பட்டது.

thanjavur
தஞ்சை

தஞ்சாவூர் பெரியகோயில் வாராஹி அம்மனுக்கு தேங்காய் பூ அலங்காரம்

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் தனி சன்னதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில், மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும். வேறு எங்கும் நடைபெறுவது இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி 21ஆம் ஆண்டு பெருவிழா தஞ்சை பெரிய கோயிலில் கடந்த ஜூன் 18ஆம் தேதி ஸ்ரீ மஹாகணபதி ஹோமம், ஸ்ரீ மஹா கணபதி அபிஷேகம், ஸ்ரீ மஹா வாராஹி அபிஷேகம் ஆகியவற்றுடன் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம், மஞ்சள் அலங்காரம், குங்கும அலங்காரம், சந்தன அலங்காரம், தேங்காய் பூ அலங்காரம், மாதுளை அலங்காரம், நவதான்ய அலங்காரம், வெண்ணெய் அலங்காரம், கனி வகை அலங்காரம், காய்கறி அலங்காரம், புஷ்ப அலங்காரம் என தினமும் அம்மனுக்கு அபிஷேகமும் பல்வேறு அலங்காரங்களும் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து அம்மன் திருவீதி உலா மற்றும் பூச்சொரிதலும் நடைபெற உள்ளது. மேலும், மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நந்தி மண்டபத்தில் நடைபெறும். ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவித்து கொள்வர். அதேபோல் முதல் நாள் 18ஆம் தேதி அன்று சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் வளர்த்து அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு முதல் நாள் இனிப்பு வகைகளான ஜாங்கிரி, லட்டு, குலோப் ஜாமுன், மைசூர்பாகு, பால்கோவா, உள்ளிட்ட பல்வேறு இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் நாள் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. மேலும், மூன்றாம் நாள் குங்குமம் அலங்காரம் நடைபெற்றது. நான்காம் நாள் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து 5ஆம் நாளான நேற்று (ஜூன் 22) தேங்காய் பூ துருவல்களால் மஹா வாராஹி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. மேலும், மத்திய அரசின் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நந்தி மண்டபத்தில் கலை நிகழ்ச்சியாக கோயம்புத்தூர் காளிதாஸ் குழுவினரின் தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் கோடை விழா தொடக்கம்; 350க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு!

Last Updated : Jun 23, 2023, 5:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details