தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் சமுத்திரம் ஏரியில் கழிவுநீர் கலப்பதைத் தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று (ஆகஸ்ட் 3 ) நேரில் பார்வையிட்டார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் 3.50 லட்சம் ஏக்கரில் கருகத் தொடங்கிவிட்டது. 1.50 லட்சம் ஏக்கரில் மட்டுமே நிலத்தடி நீரை நம்பி சாகுபடி தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 30 லட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால். விவசாயிகள் கண்ணீர் விட்டுக் கதறுகிறார்கள். ஆனால் அதை முதலமைச்சர் கண்டுகொள்ள மறுக்கிறார். திமுக ஆட்சிக் காலம் காவிரி டெல்டா விவசாயிகளுக்குக் கேடுகாலமாக அமைந்து விட்டதோ? என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள். குறுவை இழந்த விவசாயிகள் சம்பா பணியையும் துவக்க முடியாமல் நம்பிக்கை இழந்து உள்ளார்கள்.
மேட்டூர் அணையில் 60 அடிக்குக் கீழே தண்ணீர் குறைந்துவிட்டது. கர்நாடகா அணைகளில் நிரம்பத் தண்ணீர் இருந்தும் அதைப் பெற்றுத்தரத் தமிழ்நாடு அரசு வாய் திறக்க மறுக்கிறது. கர்நாடகாவில் பொது விநியோகத் திட்டத்திற்கு அரிசி கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டையும், கர்நாடகத்தையும் மோத விட்டு மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தட்டிக் கேட்கத் தமிழக முதலமைச்சர் தயங்குவது வேதனை அளிக்கிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைச் சந்திப்பதற்கு அமைச்சர்கள் குழுவையோ, அதிகாரிகள் குழுவையோ அனுப்பி வைக்கக் கூட தமிழக அரசு மறுத்து உள்ளது. காவிரி உட்பட அனைத்து ஆறுகளிலும் கழிவு நீர் கலந்து வருகிறது.