தஞ்சாவூர்:இராஜராஜ சோழன் சதய விழாவினை முன்னிட்டு இராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் பெரிய நாயகி அம்மன், பெருவுடையார் சுவாமிகளுக்கு பேரபிஷேகம் நடைபெற்றது. இதனிடையே ராஜராஜ சோழன் சிலைக்கு தருமபுர ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, தருமபுர ஆதீனம் சார்பில் பெரிய கோயிலில் நடைபெற்ற பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு ஆகியவற்றில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தருமபுர ஆதீனம், "திருவிசைப்பா பதிகம் பெற்ற ஊர் தஞ்சாவூர். இராஜராசேச்சரம் என்பது கோவிலின் பெயர். இராஜராஜ சோழன் சிவபாதசேகரன், பல நாடுகளுக்கு சென்றும், வடநாடுகளுக்குச் சென்றும் பல வெற்றிகளை கொண்டு வந்தவன், அழியா புகழ் பெற்ற திருக்கோவில்களை எழுப்பித்தவன். திருமுறைகளை நமக்கு தேடி எடுத்து கொடுத்தவன்.
அதனால் திருமுறை கண்ட சோழன் என்றும் போற்றப்படுவதுண்டு. தருமபுர ஆதீனத்தில் சதய நாளில், சித்திரை சதயத்தில் சீர்காழி கோயிலில் செப்பேடுகள் கிடைத்தது. அவை முழுவதும் திருமுறைகளைப் பற்றியதாகவே இருந்தது. அந்த தொடர்பினால் என்னவோ, இந்த சதய விழாவில் பெருவுடையாருக்கு தருமபுர ஆதீனம் சார்பில் அபிஷேகம் செய்வதற்குப் பேறு கிட்டியுள்ளது. சென்ற முறை சதய விழாவை, அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தோம். அதை அரசு நிறைவேற்றி இருக்கிறது" என்று தெரிவித்தார்.