தமிழ்நாடு

tamil nadu

மாணவி லாவண்யா மரண வழக்கு: சிபிஐ வழக்குப்பதிவு!

By

Published : Feb 15, 2022, 6:50 PM IST

Updated : Feb 15, 2022, 8:10 PM IST

தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா மரண வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்துள்ளது.

தஞ்சை லாவண்யா தற்கொலை வழக்கு; சிபிஐ எப்ஐஆர் பதிவு!
தஞ்சை லாவண்யா தற்கொலை வழக்கு; சிபிஐ எப்ஐஆர் பதிவு!

தஞ்சை: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் முருகானந்தம் - கனிமொழி தம்பதியர். இவர்களுடைய மகள் லாவண்யா (17). கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனிமொழி உயிரிழந்த நிலையில், சரண்யா என்பவரை முருகானந்தம் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் லாவண்யா தஞ்சையின் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்புப் படித்துவந்தார். இதற்கிடையில் கடந்த மாதம் லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

கட்டாய மதமாற்றம்

பள்ளி நிர்வாகம், விடுதிக் காப்பாளர்கள் உள்ளிட்டோர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதன் காரணமாகவே தற்கொலை முடிவை எடுத்ததாக லாவண்யாவே வாக்குமூலம் ஒன்றை அளித்திருந்தார். இந்தக் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்ததால், சரியாக படிக்க முடியாது என நினைத்தே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறும் மற்றொரு காணொலி வெளியானது. மதமாற்றம் குறித்து மாவட்ட கல்வி அலுவலரும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல்செய்தார்.

சிபிஐ முதல் தகவல் அறிக்கை

இது தொடர்பாக நீதிமன்றம் விசாரிப்பதற்கு முன்னதாகவே, கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த விவகாரத்தில் மதமாற்றம் ஏதும் நடைபெறவில்லை என முன்முடிவுக்கு வந்தது சந்தேகத்தை வலுப்படுத்தியது.

இதற்கிடையில், தனது மகளின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாணவி லாவண்யாவின் மரண வழக்கை கடந்த 31ஆம் தேதி சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

எஃப்.ஐ.ஆர். பதிவு

லாவண்யா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவுக்குத் தடைவிதிக்கக் கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் இந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை நீக்க வேண்டும் எனவும், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது எனவும் வாதிட்டார்.

சிபிஐ முதல் தகவல் அறிக்கை

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தஞ்சை மாணவி மரண வழக்கை சிபிஐ விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளிவந்த சகாயமேரியை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சந்தித்தது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ள கருத்துகளை நீக்குவது தொடர்பாக, எதிர் மனுதாரரான மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா மரண வழக்கு குறித்து, சிபிஐ இன்று (பிப்ரவரி 15) முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்தது. அதில், இயற்கைக்கு மாறான மரணம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லாவண்யாவின் தந்தை முருகானந்தம் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இதையும் படிங்க:போதைப்பொருள் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் காலதாமத நடவடிக்கைக்குப் பாராட்டு

Last Updated : Feb 15, 2022, 8:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details