தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மாங்குடி வளையபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்( 42). இவர் உழவர் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அவர் வசிக்கக்கூடிய வீட்டின் அருகே குடித்துவிட்டு இருதரப்பினர் அரிவாளால் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
இதனைக் கண்ட பன்னீரும் அவரது உறவினர்களும் சண்டையைத் தடுக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பன்னீரின் கழுத்து, கால் பகுதியிலும் அரிவாள் வெட்டு ஏற்பட்டது. அதேபோல் இவரது உறவினர்கள் மூன்று பேருக்கும் கை, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தாலுகா காவல் துறையினர் வெட்டுக் காயம் ஏற்பட்ட அனைவரையும் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.