தென்காசி மாவட்டம் பூலாங்குளம் கிராமத்தில் ஆறுமுகநயினார் என்பவருக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் கொய்யாத்தோப்பில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் ஆலங்குளம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அங்கு ஆய்வு மேற்கொண்டதில் பிளாஸ்டிக் சாக்கு மூட்டைக்குள் சடலம் இருந்ததை கண்டறிந்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், "அடையாளம் தெரியாத நபர்கள் பெண் ஒருவரின் முகத்தை சிதைத்து கொடூரமான முறையில் கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி கொய்யாத்தோப்பில் வீசி சென்றுள்ளனர்" எனத் தெரிவித்தனர்.மேலும் கொலையான பெண்ணிற்கு சுமார் 40 வயது இருக்கும் எனவும், முகம் சிதைக்கப்பட்டதால் அடையாளம் தெரியவில்லை என்றும் கூறினர்.