தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 6, 2023, 12:25 PM IST

ETV Bharat / state

Tenkasi News:தொடர் கனமழை - மேக்கரை பகுதியில் குளம் உடைந்ததால் வயல்வெளிகளை சூழ்ந்த வெள்ளம்!

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் மேக்கரைப் பகுதியில் குளம் உடைந்து மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்கள் அவதி
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்கள் அவதி

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்கள் அவதி

தென்காசி: தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று (ஜூலை 5) இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் வீழ்ச்சிகள் மற்றும் அணைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதுமே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே சாரல் மழையும், பலத்த காற்றுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது.

மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், இயற்கைச் சீற்றங்கள் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. மேலும் குற்றாலம் பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்டப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

இதில் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகள் மூழ்கி காணாமல் போகும் அளவிற்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட மேக்கரை பகுதியில் உள்ள இரட்டைக் குளம் என்கின்ற குளம், தற்போது அதிகப்படியாக மழை பெய்ததால், குளத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்து காற்றாற்று வெள்ளம் போல் உள்ளது.

அதனைத் தொடர்ந்து குளம் உடைப்பு ஏற்பட்டு, குளத்தில் இருந்த தண்ணீர் அனைத்தும் அந்த பகுதியில் உள்ள வயல்வெளிகளில் தற்போது முழுவதுமாக பாய்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது, வயல்வெளிகளில் பாய்ந்த நீரால், வயல்வெளிகள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து குளம்போல் காட்சியளிக்கிறது.

மேலும், வெள்ளமானது வயல் வெளிகளில் பாய்ந்து தென்காசி மாவட்டத்தில் பிரசித்தபெற்ற இடமான செங்கோட்டை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் உள்ள அடவிநயினார் அணைக்குச் செல்லும் சாலையை முற்றிலும் நாசமாக்கி உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், மழையானது தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக மலைப்பகுதியில் இருந்து அளவுக்கு அதிகமான தண்ணீர் தற்போது வந்து கொண்டிருக்கிறது. இதனால் குளத்தில் மேலும் உடைப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய அசாதாரண சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதுவரை குளத்தில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் முயற்சி செய்யாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் இந்த உடைப்பை உடனடியாக சரி செய்யுமாறு அந்தப் பகுதியினுடைய பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மழைக்காலங்களில் இயற்கையின் சீற்றங்களைச் சரி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:கோவை கட்டட விபத்து: இருவர் கைது - நிவாரணம் வழங்க ஏற்பாடு

ABOUT THE AUTHOR

...view details