தென்காசி: இலஞ்சி அருகேவுள்ள கொட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த வினித் - கிருத்திகா என்ற காதல் தம்பதி கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், கிருத்திகாவை அவரது குடும்பத்தார் கடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மீதான விசாரணையின்போது ஆஜரான கிருத்திகாவை 2 நாட்கள், தென்காசி அருகே உள்ள நன்னாகரம் பகுதியில் உள்ள காப்பகத்தில் வைத்து, மனநல ஆலோசனை வழங்கி 2 நாட்களுக்குப் பிறகு ஒப்புதல் வாக்குமூலம் பெற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில், 3 நாட்கள் தற்போது ஆகியுள்ள சூழலில், இன்று செங்கோட்டை நீதிமன்ற நீதித்துறை நடுவர் சுனில்ராஜா முன்னிலையில் கிருத்திகாவை காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். மதியம் 1 மணிக்கு நீதித்துறை நடுவர் சுனில்ராஜா முன்பு கிருத்திகாவை, சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் தலைமையிலான காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற அறையில் வைத்து கிருத்திகாவிடம் செங்கோட்டை நீதித்துறை நடுவர் சுனில்ராஜா ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ரகசிய வாக்குமூலத்தின்போது கிருத்திகா தனது பல்வேறு கருத்துகளை நீதித்துறை நடுவர் முன்பு கூறியதாக கூறப்படுகிறது. ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு முன்பாக நீதிமன்றத்தின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.