தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள செல்லத்தாயார்புரத்தைச் சேர்ந்தவர், ஆறுமுகம். இவருக்குச் சொந்தமான தோட்டம் தெற்கு மடத்தூர் கிராமத்தில் உள்ளது. இவர் தனது தோட்டத்தில் கடலை பயிரிட்டுள்ளார்.
இதற்கிடையில் இன்று (ஆகஸ்ட்.14) காலை வழக்கம் போல் ஆறுமுகம் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது கிணற்றில் மான் குட்டி ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்துள்ளது.
இதையடுத்து உடனே இதுகுறித்து கடையம் வன அலுவலகத்திற்குத் தகவல் கொடுத்தார். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் விரைந்து சென்று, கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது பெண் மான் குட்டியைப் பத்திரமாக மீட்டனர்.
பின்பு மீட்கப்பட்ட மான் குட்டியை வனச்சரக அலுவலகத்திற்குக் கொண்டு சென்று, கால்நடை மருத்துவரிடம் பரிசோதித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
மேலும் கடையம் அருகே தெற்கு மடத்தூர் பகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருவதாகவும், மான்கள் தொடர்ந்து விவசாயப் பயிர்களை அழித்து நாசப் படுத்துவதால், வனப்பகுதியில் விட வேண்டும் என்றும் விவசாயிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.