தென்காசி:செங்கோட்டை அருகே உள்ளது குண்டார் அணை. சுமார் 36.10 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுவருகின்றன. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சில நாட்களாக மழைபெய்துவருகிறது. இதனால் அணையில் நீர்மட்டம் உயர்ந்துவந்தது.
அந்த வகையில் இன்று (ஜூலை 5) அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவான 36.10 அடியை எட்டியுள்ளது. அணையிலிருந்து 7 கன நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால், செங்கோட்டை, இலஞ்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள நிறைகுளம், செங்கோட்டை குளம், மேல கொட்டா குளம், கீழக்கொட்டாகுளம் உள்ளிட்ட 13 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது.