தென்காசி:வாசுதேவநல்லூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர், கூலித்தொழிலாளி மாரிசெல்வம். இவரது மனைவி சுடலை என்கிற சுதா. இவர்களுக்கு 9 வயதில் தீபிகா மற்றும் 4 வயதில் அமனியா என்ற இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். இதில் தீபிகா என்ற குழந்தைக்குப் பிறக்கும்போதே சிறுநீரகப் பிரச்னை இருந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சிகிச்சை அளித்து என்ன பிரச்னை என்பதை கண்டறியவே குழந்தைக்கு 5 வயது நிரம்பியுள்ளது. குழந்தைக்கு ஒரு சிறுநீரகம் செயல் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய செய்தியால், மனமுடைந்த தீபிகா-வின் பெற்றோர்கள் தங்களால் முடிந்தவரை பணம் செலவு செய்து அதற்கான சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து குழந்தைக்கு 9 வயது நிரம்பியபோது, இடிமேல் இடி விழுந்தார்போல் இரண்டாவது சிறுநீரகமும் தற்போது செயல் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் குழந்தைக்கு இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்த நிலையில் கண்டிப்பாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
9 வயது சிறுமிக்கு சிறுநீரக செயலிழப்பு மாதம் தோறும் குழந்தைக்கு ரூ 7ஆயிரம் செலவு:குடும்பச்சூழ்நிலை காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வரும், தீபிகாவின் தந்தை மாரிசெல்வம் குழந்தையின் மருத்துவச்செலவிற்கு கடன் வாங்கி லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளார்.
அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதால் மாதம்தோறும் குழந்தைக்கு ரத்த ஊட்டத்திற்கு ரூ.7ஆயிரம் செலவில் மருந்தும் செலுத்தி வருகிறார்கள். தற்போது குழந்தைக்கு மாற்று சிறுநீரகம் வழங்க அவரது தாய் சுதா முன்வந்த நிலையிலும் அறுவை சிகிச்சைக்காக ரூ. 15 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க தவறும்பட்சத்தில் குழந்தை வளரக்கூடிய வயதிலும் முழுமையான வளர்ச்சி இல்லாமல், தற்போது எப்படி உள்ளதோ அவ்வாறே இருக்கக்கூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். என்ன செய்வது எனத்தெரியாமல் பணம் கேட்டு எங்கு செல்வது எனத் தெரியாமல் திக்கற்று தவித்துவரும் நிலையில், மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு சுகாதாரத்துறையும் குழந்தையை ஆரோக்கியமாக மீட்டுத்தரவேண்டும் என தாய் சுதா கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க:எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீர் தீ - அறை சேதம்