தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிசெல்வம் (25) என்பவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். மாரிச்செல்வம் கடந்த ஆண்டுகளில் செல்போனில் சாதாரணமாக ஆன்லைன் ரம்மி விளையாட ஆரம்பித்தவர். நாளடைவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை இரவு, பகல் பாராது விளையாடி, அதற்குப் படிப்படியாக அடிமையாகத் தொடங்கி உள்ளார்.
ரம்மி விளையாட்டில் அடிமையாகிய நிலையில் அதிகமான பணத்தையும் இழந்து ரூபாய் 25 லட்சம் ரூபாய் கடனில் தவித்துள்ளார். இதில் ரூபாய் 10 லட்சம் கடனை திருப்பிச் செலுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் மீதம் உள்ள கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் தீராத மன உளைச்சலில் தவித்து வந்துள்ளார், மாரிசெல்வம். இதனை அடுத்து செய்வது அறியாது தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார்.
இதனை அறிந்த மாரிசெல்வத்தின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாரிசெல்வத்தை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மாரிசெல்வம் உயிரிழந்தார்.
இதனை அடுத்து, அவரது உடலை உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்து சங்கரன்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளியாகிய இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.