தென்காசி:கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதியில் ஏராளமான பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ளன. இதில் ஒரு பகுதியாக “மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி” அமைந்துள்ளது. இப்பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடையநல்லூர் பகுதி மட்டுமல்லாமல் சேர்ந்தமரம், வீரசிகமணி, வலசை, இடைகால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினரின் குழந்தைகளும் படித்து வருகின்றனர்.
தற்போது இந்தப் பள்ளியில் ஆட்டோ ஓட்டுநரின் மகளாக சப்ரீன் என்ற மாணவி பண்ணிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நவீன தனிம அட்டவணையில் இருக்கும் 118 தனிமங்களின் பெயர்களை சில வினாடிக்குள் கூறி அசத்தியுள்ளார். மேலும், இவர் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதே தனிம அட்டவணையில் இருக்கும் தனிமங்களின் பெயர்களை ஆசிரியர்களின் உதவியுடன் பயிற்சி பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாணவி கூறுகையில்,“ நான் கடந்த ஒரு வருடமாக நவீன தனிம அட்டவணையில் இருக்கும் 118 தனிமங்களின் பெயர்களை ஆசிரியரின் உதவியோடு, பயிற்சி பெற்று வந்துள்ளேன். மேலும், உலக சாதனையாக 17.4 விநாடிகளில் தனிமங்களின் பெயர்களைக் கூறியுள்ளனர். அதை முறியடிக்கும் விதமாக நான் 13 விநாடிக்கு முன்னரே கூறியுள்ளேன் எனவும், நான் உலக சாதனை புரிய எனக்கு மாவட்ட முதன்மை கல்வி நிர்வாகம் தகுந்த வழிகாட்டுதல் கொடுக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.