தமிழ்நாடு

tamil nadu

சிவகங்கை தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...!

By

Published : Mar 28, 2021, 10:06 AM IST

Updated : Mar 28, 2021, 11:37 AM IST

இந்திய விடுதலை வரலாற்றில் முக்கியப் பங்காற்றியது சிவகங்கை. வாணிபம் செய்ய வந்த வெள்ளையர்கள் இந்திய சமஸ்தானங்களை தன்வயப்படுத்தி வந்த போது, வெள்ளையர்களின் பேராசைக்கு அடுத்தடுத்து அணை போட்டுத் தடுத்த சீமை சிவகங்கை. நகரத்தார் எனப்படும் தன வணிகர்களின் அரண்மனை வீடுகளுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இன்று பெயர் பெற்று விளங்குகிறது. கம்பன் முதல் காவிய கவிஞன் கண்ணதாசன் வரை தமிழுக்கு தந்து, தமிழன்னைக்கு ஒரு கோயிலையும் தன்னுள் கொண்டுள்ளது சிவகங்கை மாவட்டம். செவ்வியல் இசைக்கு அணி சேர்க்கும் கடம் தயாரிப்புக்குப் புகழ் பெற்ற இம்மாவட்டத்தில் தயாராகும் செட்டிநாடு கண்டாங்கி சேலை, புவிசார் குறியீட்டையும் பெற்றுள்ளது. நகரத்தார்களின் நா ஊறவைக்கும் பலகாரங்கள், 13 வகை சேர்மானங்களினால் ஊர் மணக்க உருவாகும் அசைவ குழம்புகளுக்கும் பெயர் போன சிவகங்கை மாவட்டம், வடக்கில் புதுக்கோட்டை, வடகிழக்கில் திருச்சிராப்பள்ளி, தென்கிழக்கில் ராமநாதபுரம், மேற்குத் திசையில் விருதுநகர், மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை எல்லையாகக் கொண்டுள்ளது.

sivaganga district watch
சிவகங்கை தொகுதிகள் வலம்

வாசல்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

தொகுதிகள் உலா:

காரைக்குடி:அதிகமான கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளதால் கல்வி நகரம் என்றும், தன வணிகர்களைக் குறிக்கும் வகையில், 'செட்டிநாடு' என்றும் அழைக்கப்படுகிறது காரைக்குடி. மொழிக்கு கோயில் கண்டுள்ள ஒரே நகரம் உலகத்தில் காரைக்குடி மட்டும் தான். இங்குத் தமிழ் அன்னைக்கு ஒரு கோயில் இருக்கிறது.

காரைக்குடியில் உற்பத்தியாகும் கண்டாங்கி சேலை தன் தனித்துவத்திற்காகப் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இங்குள்ள ஆத்தங்குடி பகுதியில் தயாராகும் 'டைல்ஸ்' உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மத்திய மின் வேதியியல் ஆய்வகம் (செக்ரி) இந்தத் தொகுதிக்குள் அமைந்துள்ளது.

காரைக்குடியை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும்; தொகுதியைச் சுற்றி நிறைய சுற்றுலாத் தலங்கள் உள்ளதால், இங்கு ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும்; அரசு மருத்துவமனையை நவீனப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன. தொகுதியில் நீண்ட நாட்களாக இருந்து வந்த குடிநீர் தேவைத் தீர்க்கப்பட்டாலும், பாதாள சாக்கடைத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாதது குறையாகவே தொடர்கிறது.

திருப்பத்தூர் :முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் பாரி ஆண்ட பரம்பு மலை, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வலங்கை விநாயகரான கற்பக விநாயகர் கோயில், மருது சகோதரர்கள் மணிமண்டபம், செட்டிநாட்டு அரண்மனைகள் இந்தத் தொகுதியில் அமைந்துள்ளன. காவிய கவிஞர் கண்ணதாசன் பிறந்த ஊர் இங்கு தான் உள்ளது.

சிவகங்கை தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...!

தொகுதியில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; சிப்காட் தொடங்கப்பட வேண்டும்; தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தொகுதிவாசிகளின் கோரிக்கை. பாரி மன்னன் ஆண்ட பரம்புமலையைச் சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும்; பெரிய கண்மாய்க்கு நீர்வரும் பாதைகளைத் தூர்வாரி கண்மாய் நிரம்ப வழிவகை செய்ய வேண்டும்; காரைக்குடி - மதுரை ரயில் போக்குவரத்து திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பன இத்தொகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகும்.

சிவகங்கை:ராமநாதபுரத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தனி நாடாக சிவகங்கையை ஆண்ட சசிவர்ணதேவரின் அரண்மனை நகரின் நடுவில் கம்பீரமாக இருக்கிறது. வெள்ளையர்களை எதிர்த்து ஆயுதமேந்தி போராடிய வீர மங்கை வேலுநாச்சியார், அவரது மறத்தளபதிகளான மருது சகோதரர்கள், பெண் போராளி குயிலி, கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாழ்ந்த மண் இது.

நாலாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள், சமணர் படுக்கைகளைக் கொண்ட திருமலை சிவகங்கையில் இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலாத்தலம். அமைச்சர் பாஸ்கரனின் தொகுதி. இந்தத் தொகுதியின் முக்கிய பிரச்னை, இங்குள்ள கிராபைட் ஆலை. இந்த ஆலையை விரிவுபடுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என தொகுதி மக்கள் நீண்ட காலமாகக் கூறி வருகின்றனர். காவிரி-வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்; சிவகங்கையில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பன தொகுதியின் பிற கோரிக்கைகளாகும்.

மானாமதுரை (தனி) : தமிழர்களின் நாகரீகத்தை உலகிற்கு எடுத்துக் கூறிவரும் கீழடி அமைந்துள்ள தொகுதி. வைகை நதி பாசனம் பெறும் தொகுதியும் கூட. மண்மணக்கும் இங்கு மண்பாண்டம் உற்பத்தி சிறப்பாக நடக்கிறது. இங்குத் தயாரிக்கப்படும் கடம் உலகம் முழுவதும புகழ்பெற்றது.

இங்குள்ள விவசாயிகளுக்கு வைகை நதியிலிருந்து நீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. ஒரு போகம் விவசாயம் செய்வதற்குத் தண்ணீர் கிடைக்க வழங்கப்பட்ட உத்திரவாதம் நிறைவேற்றப்படவில்லை. தொகுதியில சிப்காட்டை விரிவாக்கம் செய்து புதிய தொழிற்சாலைகள் கொண்டுவர ஏற்படுகள் செய்ய வேண்டும்; அரசு கல்லூரி அமைக்கப்பட வேண்டும்; போன்றவை தொகுதியின் கோரிக்கைகளாகவுள்ளன.

களநிலவரம்:

தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி, செட்டிநாட்டு அரண்மனைகள், சிராவயல் மஞ்சுவிரட்டு, ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள், சிவகங்கை மன்னர்களின் அரண்மனைகள் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட சிவகங்கையில், கிராஃபைட் தொழிற்சாலை பிரச்னை, குடிநீர் பிரச்னை, காரைக்குடியை மாநகரமாக அறிவிக்க வேண்டும் என அடிப்படை பிரச்னை முதல் தனிப்பட்ட பிரச்னை வரை தீர்க்கப்படாமல் உள்ளன.

மாவட்டத்தில் உள்ள நான்குத் தொகுதிகளில், இரண்டில் அதிமுகவும், மீதமுள்ள இரண்டில் ஒன்று திமுக வசமும், மற்றொன்று காங்கிரஸிடமும் உள்ளன. தற்போதுள்ள திமுக, காங்கிரஸ், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது பரவலாக அதிருப்தியே நிலவுகிறது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு சம அளவிலான செல்வாக்கும், பாதிப்பும் உள்ளன. இங்கு வெற்றி தோல்வியை சமூதாய வாக்குகளே தீர்மானிப்பதால், அதற்கு தகுந்தாற்போல் காய்நகர்த்தும் கட்சிகளுக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்.

Last Updated : Mar 28, 2021, 11:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details