தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 19, 2022, 6:31 AM IST

ETV Bharat / state

' பெண்கள் கல்விக்கு அளித்த முக்கியத்துவம் புரட்சிகரமானது' - பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து

தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் பெண்கள் இடைநின்றல் இல்லாமல் தொடர்ந்து பட்ட படிப்பு, பட்டய படிப்பு படிக்க மாதம் ரூ.1,000 அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 18) டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ப.சிதம்பரம் கலந்துகொண்டு தொண்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'இன்று (Tamil Nadu Budget 2022-23) தமிழ்நாடு அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்கள். முழு ஆண்டுக்கான முதல் அறிக்கை, கடந்த ஆண்டு குறை ஆண்டுக்கான அறிக்கை தான் தாக்கல் செய்துள்ளார்கள். அது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

பாராட்டுகள்

கல்வித் துறைக்கும், சுகாதாரத் துறைக்கும் மிகப் பெருமளவு நிதியை ஒதுக்கி உள்ளார்கள். கல்வியும், சுகாதாரமும் தான் ஒரு நாட்டு மக்களின் இரண்டு முக்கிய தேவைகள். அந்த அளவுக்கு நிதி ஒதுக்கியதற்காக தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும், நிதி அமைச்சருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி

புரட்சிகரமான அறிவிப்பு

குறிப்பாக பெண்கள் கல்வியில் மிகுந்த அக்கறை காட்டி இருக்கிறார்கள். அரசு பள்ளிகளில் படிக்க கூடிய பெண்கள் இடைநின்றல் இல்லாமல் பட்ட படிப்பு, பட்டய படிப்பு தொடர்ந்து படிக்க மாதம் ரூ.1,000 அறிவித்திருப்பது புரட்சிகரமான அறிவிப்பு ஆகும். சுகாதாரத்துறையில கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுவதற்காக நிறைய பணம் ஒதுக்கி உள்ளார்கள் அதற்காகவும் பாராட்டுகிறேன். அதே நேரத்தில், கல்வியும் சுகாதாரமும் வெறும் நல்வாழ்வு ஒதுக்கீடு என்று சொல்லக்கூடாது.

கல்வி-சுகாதாரத்திற்கு செலவிடலாம்

எப்படி சாலை போடுவது அணை கட்டுவது தொழிலை தொடங்குவது கட்டமைப்புக்கு கீழ் வருகிறதோ அதைப் போல, கல்வித்துறையிலும் சுகாதார துறையில் செலவழிப்பது என்பது ஒரு வகையில் சமுதாய கட்டமைப்பு தான். அதனால், பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். பல்லாயிரம் பேர் கல்வி பெறுவார்கள். பல்லாயிரம் பேர் ஆரோக்கியமான வாழ்க்கை பெறுவார்கள்.

மனப்பூர்வமானப் பாராட்டுகள்

உயர்கல்வியும் ஆரோக்கியமான வாழ்வும் பல மடங்கு பலன் அளிக்கும். ஆகவே, மனதார பாராட்டுகிறேன். மேலும் மற்ற கட்டமைப்புக்கும் நிறைய பணம் ஒதுக்கி இருக்கிறார்கள். குறிப்பாக, தனியார் முதலீடுகளை அதிகரிப்பதும் அரசு முதலீடு செய்வதற்கும் நிதி ஒதுக்கியுள்ளார்கள்.

இதன் மூலமாக வேலைவாய்ப்பு உருவாகும் என்று நம்புகிறேன். மொத்தத்தில் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி நல்வாழ்வு , வளர்ச்சி இரண்டு கண்களையும் அவர்கள் திறந்து பார்த்து இரண்டு இனங்களுக்கும் நிறைய பணம் ஒதுக்கியதற்கு மனதார பாராட்டுகிறேன்.

அதே நேரத்தில் நிதி மேம்பாட்டில், வருவாய் பற்றாக்குறையை ரூ.7000 கோடி குறைந்து இருப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். நிதிப்பற்றாக்குறை அடுத்த ஆண்டு புள்ளி 7 % குறையும் என்று தெரிவித்துள்ளார். இது வெற்றிகரமான நிதி மேலாண்மையை காட்டுகிறது. இதற்காக அரசை பாராட்டுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்ட விவகாரம் - உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details