சிவகங்கை அருகே வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட முதல் பெண் வீராங்கனை ராணி வேலுநாச்சியாரின் 292ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ஜனவரி 3ஆம் தேதி அவரது மணிமண்டபத்தில் உள்ள திருஉருவச்சிலைக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையிலானோர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர்.
கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் அதிக வாகனங்களில் கூட்டமாக வந்ததாக, சூரக்குளம் கிராம நிர்வாக அலுவலர் காவல்துறையில் புகாரளித்தார்.
புகாரின் அடிப்படையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா உள்பட 415 பேர், 31 வாகனங்கள் மீது சிவகங்கை நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலுநாச்சியாரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டோர் தொடர்பான காணொலி தொடர்ந்து சிவகங்கை அரண்மனை வாசலில் கரானா விதிகளை மீறி கூட்டம் கூடியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் சாலையின் இருபுறமும் அதிகமான பேனர்கள் வைத்திருந்ததாகவும் காஞ்சிரங்கால் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலுநாச்சியாரின் பிறந்த நாள் விழாவில் பாஜக மட்டுமின்றி அரசு சார்பில் அமைச்சர் பெரியகருப்பன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உள்ளிட்டோரும் கூட்டமாக சென்று மாலை அணிவித்தனர். இருப்பினும் பாஜக மீது மட்டும் சிவகங்கை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Ban on Live Classes in TN: 1 முதல் 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்பிற்குத் தடை - தமிழ்நாடு அரசு