சிவகங்கைமாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் நிர்வாகியாக நாகராணி அம்மையார் என்பவர் இருந்து வருகிறார். இவர் சிறுவயது முதலே கடந்த 46 வருடங்களாக 48 நாட்கள் விரதம் இருந்து முள்படுக்கையில் அமர்ந்தும் நின்று கொண்டும், ஆடிப் பாடியும் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 46ஆம் ஆண்டு மண்டல பூஜை விழாவையொட்டி 108 சங்காபிஷேகம் இன்று (ஜன.3) நடைபெற்றது.
முள்படுக்கையில் சாமியாட்டம்:பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து நாகராணி அம்மையார் முள்படுக்கையில் அமர்ந்து அருளாசி வழங்குவதற்காக கோயில் முன்பு உள்ள திடலில் உடைமுள், இலந்தை முள், கற்றாழை முள் உள்ளிட்டப் பல்வேறு முட்களால் 7 அடி உயரத்துக்கு முள்படுக்கை அமைக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மேளதாளம் முழங்க கும்மியடித்து பக்தி பாடல்கள் பாடி, தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.