தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகங்கை அரசு காப்பகத்தில் இரு சிறுமிகள் மாயம்! - சிவகங்கை அரசு காப்பகம்

சிவகங்கை அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்த 2 பெண் குழந்தைகள் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 3, 2023, 11:56 AM IST

சிவகங்கை:சிவகங்கையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கில் சிக்கிய குழந்தைகள், வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மீட்கப்பட்ட குழந்தைகள் என 42 குழந்தைகள் என பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இரு வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்ட காரைக்குடியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரும், திருவேகம்புத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரும் இங்கு அழைத்து வரப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை அந்த இரு சிறுமிகளும் காப்பகத்திலிருந்து திடிரென காணாமல் போயுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு குழந்தைகள் காணாமல் போனதாக காப்பகத்தின் பொறுப்பாளர் ஜெயா சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், இந்த காப்பகத்தில் பணிபுரியும் இரவு காவலர் சிதம்பரம், அதே பகுதியை சேர்ந்தவர் என்பதால் இரவு நேர பணிக்கு முறையாக வருவதில்லை என்றும், இங்குள்ள சி.சி.டி.வி கேமராக்களும் முறையாக இயங்குவதில்லை என்றும், இவற்றை கண்காணிக்கும் அதிகாரிகள் அலட்சிய போக்கில் செயல்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் இந்த காப்பகம் முறையான பாதுகாப்பு இன்றியே செயல்பட்டு வருவதாகவும், அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் இந்த காப்பகத்தில் இருக்கிற பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அண்மையில் வேலூரில் அரசு காப்பகத்தில் இருந்து 6 சிறார்கள் பாதுகாவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவத்தின் வடு மறைவதற்குள் மேலும் ஒரு காப்பகத்தில் இருந்து சிறுமிகள் தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:SMS மூலம் இந்தியா முழுவதும் சைபர் மோசடி செய்த கும்பல் கூண்டோடு கைது - அழைத்து பாராட்டிய டிஜிபி!

ABOUT THE AUTHOR

...view details