தமிழ்நாடு

tamil nadu

திருமணத்தை மீறிய உறவு - கணவனை கொலை செய்த மனைவி கைது

By

Published : Mar 18, 2022, 2:04 PM IST

சேலத்தில் திருமணத்தை மீறிய உறவால் கணவனை கொலை செய்து கிணற்றில் வீசிய மனைவி உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கணவனை கொலை செய்த மனைவி உள்பட இருவர் கைது
கணவனை கொலை செய்த மனைவி உள்பட இருவர் கைது

சேலம்: அழகாபுரம் அடுத்த மிட்டாபுதூர் பகுதியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி (34). இவரது கணவர் வெங்கடேசன் (40). தென்னாப்பிரிக்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். வேலைக்காக கணவர் வெளிநாடு சென்றிருந்த நிலையில் விஜயலட்சுமிக்கும் அவரது தங்கை கணவர் குமரனுக்கும் நெருக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தை மீறிய உறவாக மாறியது.

இந்த தகவல் தென்னாப்பிரிக்காவில் இருந்த வெங்கடேசனுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி அன்று சொந்த ஊர் திரும்புவதற்காக வெங்கடேசன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவரை குமரன் நேரில் சென்று அழைத்து வந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து மனைவியை பார்க்க வீட்டிற்குச் சென்ற வெங்கடேசன், குமரனுடன் இருக்கும் திருமணத்தை மீறிய உறவு தொடர்பாக, கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்து வாக்குவாதத்தில் தலையிட்ட குமரனுக்கும் வெங்கடேசனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், குமரன் இரும்பு கம்பியால் தாக்கியதில் வெங்கடேசன் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை மறைப்பதற்காக குமரன், விஜயலட்சுமி ஆகியோர் சடலத்தை, கல்லை கட்டி மிட்டாபுதூர் பகுதியிலுள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசியுள்ளனர். இருப்பினும் செய்த கொலையை உறவினர்களிடையே தொடர்ந்து மறைக்க முடியாத காரணத்தால் குமரனும் விஜயலட்சுமியும் பெரிய புதூர் கிராம நிர்வாக அலுவலரிடம் நடந்த விவரங்களைச் சொல்லி சரணடைந்தனர்.

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் புஷ்பா அழகாபுரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சரணடைந்த இருவரையும் காவல் துறையினர் சம்பவ பகுதிக்கு நேரில் அழைத்துச் சென்று கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் வெங்கடேசனின் சடலத்தை மீட்டனர். மேலும் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:தலைமை செயலகம் எதிரே தற்கொலைக்கு முயன்ற பெண்...!

ABOUT THE AUTHOR

...view details