தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 4, 2019, 10:40 AM IST

ETV Bharat / state

'பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது தமிழ்நாட்டுக்கு எடப்பாடி செய்யும் பெரும் துரோகம்...!'

சேலம்: அதானி உள்ளிட்ட பிரதமர் மோடி கூட்டாளி நிறுவனங்களின் கடன்களை 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கும் மேல் தள்ளுபடி செய்த பாஜக அரசுக்கு ஏன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அளிக்கிறார்? என திமுக மூத்த தலைவர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

vellu

சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து, சேலம் தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் எ.வ.வேலு பேசுகையில்,

  • அடிக்கடி தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் நான்கு முறை கேள்வி எழுப்பப்பட்டும் தமிழ்நாடு விவசாயிகளின் கடன்களை ஏன் ரத்து செய்யவில்லை?
  • அதானி உள்ளிட்ட பிரதமர் மோடி கூட்டாளி நிறுவனங்களின் கடன்களை 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கும் மேல் தள்ளுபடி செய்த பாஜக அரசுக்கு ஏன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அளிக்கிறார்?
  • நீட் தேர்வை கொண்டுவந்த பாஜக அரசை அவர்கள் ஏன் மீண்டும் கொண்டுவர நினைக்கிறார்கள்? என அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

மேலும் அவர், "தமிழர்களின் நலன் மீது அக்கறை இல்லாமல் எடப்பாடி அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரியை கொண்டுவரக் கூடாது என கருணாநிதியும், ஜெயலலிதாவும் நினைத்தனர். அவர்கள் இருக்கும்வரை ஜிஎஸ்டி வரி தமிழ்நாட்டில் வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டு ஜிஎஸ்டி வரியை தமிழ்நாட்டில் நுழையவிட்டுள்ளது.

இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்று கூறிய மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததில் மட்டுமே மாற்றிக்காட்டினார்.அதில்தான் எவ்வளவு பாதிப்புகள் மக்களுக்கு ஏற்பட்டன. அதைப்பற்றி பாஜகவுக்கு அக்கறையே இல்லை. கறுப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று கூறிய பிரதமர் மோடி எங்கே ஒழித்துக் கட்டினார். ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் மத்திய அரசு சார்பில் சேர்க்கப்படும் என்று அவர்கள் கூறியது மிகப்பெரிய பொய்.

நீட் தேர்வை கொண்டுவந்த பாஜக தலைமையிலான கூட்டணியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரிப்பது தமிழர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார். ஏன் இதுவரை நடக்கவில்லை. மக்கள் விரோத ஆட்சி நடத்திவரும் மத்திய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவைக்க வேண்டும்” என்றார்.

திமுக வேலு பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details