சேலம்: சேலம் மாவட்டம் கருப்பூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். மாற்றுத்திறனாளிக்கு வரை திருட்டு வழக்கில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல்துறையினர் கடந்த ஜன.11ஆம் தேதி கைது செய்து அந்த மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அன்றைய தினம் இரவே அவர் உயிரிழந்தார்.
விசிக கட்சியினர் மறியல்:
பிரபாகரன் இறப்புக்குப் காவல்துறையினர் துன்புறுத்தலே காரணம் எனக்கூறியும், இதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், பிரபாகரன் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கடந்த ஜன.13-ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையில் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கைதி உயிரிழப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சேலம் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட எஸ்பி சரத்குமார் தாக்கூர் , சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ் இறந்தவரின் மனைவி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர் .
அதில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் அரசு வேலை வழங்க வேண்டும், காவல்துறை மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை பெறுவோம் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
காவலர்கள் பணியிடை நீக்கம்:
இந்நிலையில், இறந்த பிரபாகரனின் சகோதரர் சக்திவேல் சேலம் அரசு மருத்துமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று சேலம் முதலாவது நீதித்துறை நடுவர் கலைவாணி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார், தொடர்ந்து உடற்கூராய்வு பரிசோதனை நடைபெற்றது.
முன்னதாக, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைப்படி, திருச்செங்கோடு தாலுகா முதல்நிலைக் காவலர் குழந்தைவேல், புதுச்சத்திரம் உதவி ஆய்வாளர் பூங்கொடி , சேந்தமங்கலம் உதவி ஆய்வாளர் சந்திரன் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து சேலம் சரக டிஐஜி பொறுப்பில் உள்ள சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். இதையடுத்து உயிரிழந்த பிரபாகரனின் உடலை இன்று உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க:ராஜேந்திரபாலாஜி மீது புகார் அளித்தவர் கைது!