முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் வருகை! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சேலம்: பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (ஆகஸ்ட் 5) சேலம் வருகிறார்.
சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு நாளை (ஆகஸ்ட் 5) மாலை சேலம் வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக சேலம் மாவட்டச் செயலாளர் எம்எல்ஏ ஜி.வெங்கடாஜலம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன்பின் சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் முதலமைச்சர் தங்குகிறார். பின்னர் ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 6 மணிக்கு சேலத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு, மதுரை செல்லும் முதலமைச்சர், அங்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள், வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தொடர்ந்து மதுரை மாவட்டத்தில், பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கியும் வைக்க உள்ளார்.
பின்னர் அன்று இரவு (ஆகஸ்ட் 6) மதுரையில் தங்குகிறார். அதனையடுத்து ஆகஸ்ட் 7ஆம் தேதி மதுரையில் இருந்து கார் மூலம் திருநெல்வேலி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு மாவட்ட அலுவலர்களுடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.
அதன் பின்னர் பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். பின்னர் இரவு(ஆகஸ்ட் 7) கார் மூலம் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லம் திரும்புகிறார்.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி சேலத்தில் மாவட்ட அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து அதிமுக மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேசுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்பின் திங்கள் கிழமை(ஆகஸ்ட் 9) காலை சென்னை புறப்பட்டுச் செல்வார் எனத் தெரிகிறது. முதலமைச்சரின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.