சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை, அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து அதன் உபரி நீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நீர் செல்லும் பாதையில் வசிக்கும் பொதுமக்களிடம், 'நீர் அதிகளவிலாக வந்து கொண்டுள்ளது. பொதுமக்கள் யாரும் நீர் செல்லும் பாதையில் செல்ஃபி எடுக்கவோ, சுற்றிப் பார்க்கவோ வேண்டாம்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையில் காலை 50,000 கன அடியாக நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் படிப்படியாக நீர் வரத்தானது முழுவதுமாக அப்படியே வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் சின்ன கண்ணூர் பகுதியில் உள்ள மூன்று கல்லூரி மாணவர்கள் செல்ஃபி எடுப்பதற்காக நீர் செல்லும் பகுதிக்குச்சென்றுள்ளனர்.
அப்போது, அதிக அளவில் நீர் வந்ததால் நீரின் நடுவில் மூவரும் சிக்கிக்கொண்டனர். உடனடியாக இதனையறிந்த காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளிட்டோர் மூவரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர், மூன்று பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.