தமிழ்நாடு

tamil nadu

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்த கணவர்: தேடுதல் வேட்டையில் தனிப்படையினர்!

By

Published : Nov 11, 2019, 11:12 PM IST

சேலம்: மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த நபரை இரண்டு தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சேலத்தில் பரபரப்பு

சேலம் மாவட்டம் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் மேகனஸ்வரி(21). இவர், மன்னார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி கோபியை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று வயதில் சிம்பு என்ற மகனும் உள்ளார். கோபி தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மேகனஸ்வரியை அடித்து துன்புறுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் தனது மகன் சிம்புவை அழைத்துக்கொண்டு சேலத்தில் வசிக்கும் தந்தை வீட்டிற்கு மேகனஸ்வரி சென்றுவிட்டார். பின்னர் அவரை பல முறை சந்தித்து குடும்பம் நடத்தவருமாறு கோபி அழைத்தும், வரமுடியாது என மேகனஸ்வரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு சேலத்திற்கு வந்த கோபி, துணிக்கடையில் பணிபுரிந்துவிட்டு வீட்டிற்கு வந்த மேகனஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகையில், கோபி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மேகனஸ்வரியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் சாலையில் துடிதுடித்து மேகனஸ்வரி உயிரிழந்தார்.

மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்த கணவர்

பின்னர் அதிகாலையில், மேகனஸ்வரியின் உடலைப் பார்த்த அப்பகுதி மக்கள் மேகனஸ்வரி தந்தைக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் பின், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் மேகனஸ்வரியின் உடலை உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த சனிக்கிழமை கோபி கோவையில் சம்பளம் வாங்கிக்கொண்டு, சேலத்திலுள்ள தனது மனைவியை அழைத்து வருவதாகத் தனது நண்பர்களிடம் தெரிவித்துவிட்டுக் கிளம்பியுள்ளார் என்றும், சேலம் வந்த கோபி மது அருந்திவிட்டு இரவு மோகனஸ்வரியை சந்தித்தபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட கொலை செய்துவிட்டுத் தப்பியோடினார் என்றும் தெரியவந்துள்ளது. தற்போது கோபியைப் பிடிப்பதற்காக காவல் துறையினர் இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: காரை தறிக்கெட்டு ஓட்டிய மாணவன்: விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details