சேலம்:கடந்த சில நாள்களாக சேலம் மாவட்டத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் சேலம், சிவதாபுரம் பகுதியில் சேலத்தாம்பட்டி ஏரி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிரம்பியது.
ஏரியில் வெளியேறும் உபரிநீர் ஊருக்குள் புகுந்ததால் எம்ஜிஆர் நகர், இந்திரா நகர், அம்மன் நகர் முத்து நாயக்கர் காலனி உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்து நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் வீட்டில் இருந்து பொருள்களை வெளியேற்றி வருகின்றனர். குறிப்பாக சிவதாபுரத்தில் இருந்து இளம்பிள்ளை செல்லும் பிரதான சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் மழைநீர் சூழ்ந்து சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.