தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தன்னம்பிக்கை நாயகன்! காளான் வளர்ப்பில் அசத்தும் சேலம் இளைஞர் - engineer earns from mushrooms cultivation

பல தடைகளை கடந்து காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் இளைஞர் ஸ்ரீதர். குறைந்த முதலீட்டில் லாபம் ஈட்டி வருவதுடன், தன்னையொத்த பட்டதாரிகளுக்கு எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது காளான் வளர்ப்பு குறித்து பயிற்சியும் அளித்து வருகிறார். வெறுமனே காளான் வளர்ப்பில் வெற்றி கண்டதால் அல்ல.. தன்னைப் போன்றோரையும் வெற்றிக்கு அழைத்துச் செல்வதால்தான் இவர், தன்னம்பிக்கை நாயகன்!

தன்னம்பிக்கை நாயகன்!
தன்னம்பிக்கை நாயகன்!

By

Published : Nov 29, 2020, 11:39 AM IST

Updated : Dec 2, 2020, 12:55 PM IST

இளங்கலை பொறியியல் பயின்றிருந்தாலும், சொந்த ஊரில் சுயதொழில் தொடங்குவதே ஸ்ரீராமின் விருப்பம். முதலில் கோழிப் பண்ணை வைக்க நினைத்தவர், எதேச்சையாக காளான் வளர்ப்பு குறித்து அறிந்தார். காளான் வளர்ப்பு குறைந்த முதலீட்டில் தொடங்குவதற்கான தொழிலாக தெரியவே முழு மூச்சாக ஸ்ரீராம் அதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

தொழிலை முடிவு செய்தாகிவிட்டது. அதனைச் செய்வதெப்படி? காளானைப் பயிரிடுவது குறித்து ஸ்ரீராமிற்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. சேலம் மாவட்டத்தில் காளான் வளர்த்து வருபவர்களை நாடியுள்ளார்.

ஸ்ரீராமின் ஆர்வத்தை ஒருவரும் புரிந்துகொண்டு உதவவில்லை. எல்லா கதவுகளும் அடைத்தப் பின்னரும்கூட ஒரு சிறிய ஒளிக்கீற்று தெரியும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து முயன்றார், ஸ்ரீராம். அவரின் ஆர்வமும் விடாமுயற்சியும் ஏற்காடு அடிவாரத்தில் 25 ஆண்டுகளாகக் காளான் வளர்த்த ஒருவரிடம் ஸ்ரீராமைக் கொண்டுச் சேர்த்தது.

காளான் விதைகளைத் தேர்ந்தெடுப்பது தொடங்கி, அதனைப் பயிரிட்டு சாகுபடி செய்வது வரையிலும் அனைத்தையும் கற்றுக்கொண்டார், தன்னம்பிக்கை நாயகன் ஸ்ரீராம். தொடர் பயிற்சியின் பலனாக, தனியனாக காளான் வளர்ப்பில் ஈடுபட முடியும் என்ற தன்னம்பிக்கை அவருக்கு கிடைத்தது. தாரமங்கலம் பகுதியில் காளான் வளர்ப்பில் யாரும் ஆர்வம் செலுத்தவில்லை என்பதை அறிந்து அங்கேயே கொட்டகை அமைத்தார்.

முதல் முதலீடு

தன்னம்பிக்கையை மட்டும் முதலீடாகக் கொண்டு காளான் வளர்ப்பில் ஈடுபட்ட ஸ்ரீராம், அடுத்தடுத்து சந்தித்த இன்னல்கள் குறித்து கேட்டபோது, ’அதை நான் இன்னல்களாக பார்க்கவில்லை. என்னை வளர்த்தெடுத்த அனுபவங்களாகத்தான் பார்க்கிறேன்’ என சிறுபுன்னகையுடன் பேசத் தொடங்கினார்.

”நான் ஆரம்பத்துல 35 ஆயிரம் ரூபாய் முதலீடு போட்டேன். காளான் வளர்ப்பதற்கு விதைகள், வைக்கோல், தண்ணீர் இதமான சூழல் நிலவும் கொட்டகைதான் அத்தியாவசியம். அதை தயார் பண்ணிட்டு வேலைகளைத் தொடங்கிட்டேன். 4 கிலோ முதல் 5 கிலோ விதைகளை வாங்கி காளான் வளர்ப்பை தொடங்கினேன்.

தன்னம்பிக்கை நாயகன்!

சில நேரங்கள்ல சொதப்பும். எனக்கு கத்துக்கொடுத்த அண்ணன்கிட்டயே போய் நிப்பேன். அவர் திரும்ப சொல்லிக் கொடுப்பாரு. நாளாக நாளாக, நானே அடுத்தடுத்து முயற்சி செய்ய ஆரம்பிச்சேன். தொழில் யுக்தியை கத்துக்கிட்டேன். இப்ப என்னோட முதலீடு கூட ஒரு மடங்கு லாபம் வருது” என்கிறார் ஸ்ரீராம், உற்சாகமாக.

கரோனா காலங்கள்ல....

’கரோனா பொதுமுடக்கம் எல்லாருக்கும் தொழில்ல பொருளாதார நெருக்கடியைக் கொடுத்தது. ஆனா என் வாழ்க்கையில மட்டும் ஒளியேத்திருக்கு’ என பொடி வைத்து பேசிய ஸ்ரீராமிடம், அதன் சூட்சமத்தைக் கேட்டோம்.

அவர், “பொதுமுடக்கம் அறிவிச்ச நேரத்துல அசைவ உணவுகளை சமைப்பதில் சில சிக்கல்கள் இருந்துச்சு. கடைகள் எதுவும் திறக்கல. அப்ப மக்கள் எனக்கு செல்போனில் கூப்பிட்டு கேட்க ஆரம்பிச்சாங்க. எங்க பண்ணையில் சிப்பி காளான்களதான் அதிகம் விளைவிக்கிறோம்.

அதையே வீடு தேடி போய் டெலிவரி பண்ண ஆரம்பிச்சேன். நாங்க வேதிப் பொருட்கள் எதுவும் கலக்காததால, வாடிக்கையாளர்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சுது”என்கிறார் மகிழ்ச்சிப் பொங்க.

இன்று நம் கண் முன் வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடை போடும் தன்னம்பிக்கை நாயகன் ஸ்ரீராம் ,ஒரு காலத்தில்சுய தொழில் தொடங்க வழிகாட்டியின்றி சிரமப்பட்டார். பல பண்ணையாளர்களின் கொட்டகைக்கு வெளியே கால் கடுக்க காத்துக்கிடந்தார்.

காளான் வளர்ச்சியின் படிநிலைகள்

அன்று தனக்கு மறுதலிக்கப்பட்ட உதவிகளை, இன்று காளான் வளர்ப்பில் ஆர்வமுள்ள தன்னையொத்த பட்டதாரிகளுக்கு இன்முகத்துடன் செய்து வியப்பூட்டுகிறார், ஸ்ரீராம்.

ஸ்ரீராம் நேர்த்தியாக காளான் வளர்ப்பை கற்றுத் தருவதாகக் கூறும் பூபதி, பிசிஏ பயின்ற பட்டதாரி. விரைவில் சுய தொழில் தொடங்கவுள்ளதாகவும் நம்பிக்கை மிளிர பேசுகிறார்.

காளான் வளர்ப்பில் அசத்தும் சேலம் இளைஞரின் கதை!

இளைஞர்களுக்கு மட்டுமின்றி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லவிருக்கும் சிறுவர்களுக்கும் ஸ்ரீராம் பயிற்சி அளித்துவருகிறார்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக காளான் வளர்ப்பில் வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் இவர், கரோனா பொதுமுடக்கத்தில் வேலை இழந்த இளைஞர்களுக்கு முன்மாதிரி என்றால் அது மிகையல்ல.

Last Updated : Dec 2, 2020, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details