சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி மூலக்கடையைச் சேர்ந்தவர் தங்கவேல் (60). இவர் சூரமங்கலம் உழவர் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்துவந்தார். இவருக்கு முருகாயி என்ற மனைவியும் நான்கு மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தங்கவேலுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து கடந்த மே 27ஆம் தேதி அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியானது.
அதனைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 18 நாள்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை மருத்துவர்கள் கொடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினர்.
வீட்டில் இருந்த அவருக்கு இருமல் அதிகரித்துள்ளது. இதனால் அவர் விரக்தியடைந்த நிலையில் மே 30ஆம் தேதி மாலை இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ரயில்வே சந்திப்பு நோக்கி வந்தார்.
அவரது மகன் ராஜேந்திரன், தனது தந்தையைப் பின்தொடர்ந்து வந்துள்ளார். அப்போது சூரமங்கலம் ரெட்டிப்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திய தங்கவேல் திடீரென, மேம்பாலத்திலிருந்து கீழே குதித்தார்.
அதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சேலம் ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: 'வீணாக வெளியே சுற்றி வினை இழுத்துக்கொள்ளும்...' - தலைமை ஆசிரியரின் விழிப்புணர்வு பாடல்