நடைபாதை உணவு கடைகளிலும், தெருவோர திறந்தவெளி உணவு கடைகளிலும் அதிக அளவு பொதுமக்கள் உணவு உண்டு வருகின்றனர் . இதனால் பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு பொதுமக்கள் ஆளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பொது மக்களுக்கான உணவு பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது .
இதன்படி தெருவோர உணவு கடை நடத்தும் வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தரமான சுத்தமான உணவு வழங்க மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சிறுதானிய உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு தானியங்கள் பயிரிடும் விவசாயிகள் ஆகியோருக்கு ஒருநாள் விளக்க கருத்தரங்கம் சேலத்தில் நடந்தது. இந்த கருத்தரங்கில் இந்திய தொழில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இளவரசன், தமிழ்நாடு கிராம வங்கி தலைவர் தனராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.