தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 11:44 AM IST

ETV Bharat / state

அக்.16 முதல் சேலம் பயணிகள் விமான சேவை தொடக்கம் - எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் தகவல்!

Salem Airport: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமான சேவை வருகிற அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்து உள்ளார்.

Salem Airport
சேலம் பயணிகள் விமான சேவை வரும் 16ஆம் தேதி முதல் தொடக்கம்

சேலம் பயணிகள் விமான சேவை வரும் 16ஆம் தேதி முதல் தொடக்கம் - எம்.பி பார்த்திபன் தகவல்

சேலம்: ஓமலூர் அருகே சேலம் விமான நிலையம் அமைந்து உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்று வந்தது. இதனிடையே, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டது. விமான சேவை நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பினார். சம்பந்தப்பட்ட மத்திய விமானத் துறை துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தார். இதனை அடுத்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின்படி, வருகிற அக்டோபர் 16ஆம் தேதி முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளது.

இது தொடர்பாக சேலம் விமான நிலையத்தில் எஸ்.ஆர்.பார்த்திபன் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறுகையில், ‘உதான்-5 திட்டத்தின் கீழ் இந்த மாதம் முதல் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அக்டோபர் 16ஆம் தேதி முதல் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரு - சேலம் - கொச்சின் வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட உள்ளது. மறுபயணமாக கொச்சின் - சேலம் - பெங்களூரு வழித்தடத்தில் இயக்கப்படும். வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் விமான சேவை நடைபெறும்.

இதே போன்று இன்டிகோ நிறுவனம் சார்பில், அக்டோபர் 29ஆம் தேதி முதல் பெங்களூரு - சேலம் - ஹைதராபாத் வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. மறு பயணமாக ஹைதராபாத் - சேலம் - பெங்களூரு வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும். வாரத்தின் நான்கு நாட்களுக்கு இண்டிகோ விமான சேவை நடைபெறும். திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இந்த சேவை நடைபெறும்.

இதே போன்று வாரத்தின் ஏழு நாட்களிலும் சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை அளிக்க இண்டிகோ நிறுவனம் முன் வந்துள்ளது. சேலம் - சென்னை விமான சேவையும் 29ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு விமான சேவை தொடங்குவதால், தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வர்த்தகர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சேலம் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஐந்து முறை விமானங்கள் வந்து செல்லும் வாய்ப்பு கடும் முயற்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்டு உள்ளது. சேலத்தில் இருந்து விமான சேவை இரவு நேரத்திலும் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக 250 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் விவசாயிகள் பாதிக்காத வகையில் நிலம் எடுக்கப்பட்டு, தற்போது 6,000 அடி நீளம் கொண்ட விமான நிலைய ஓடுபாதை 8,000 அடி நீளம் ஓடு பாதையாக மாற்றப்பட உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இரவு நேர விமான சேவையும் சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையிலான சேவைகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.

இதையும் படிங்க:‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் தாயகம் வருகை!

ABOUT THE AUTHOR

...view details