தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 3, 2019, 5:33 PM IST

ETV Bharat / state

ஆறு ஆண்டுகளாக பூட்டியிருக்கும் விடுதியை திறக்க மாணவர்கள் கோரிக்கை

சேலம்: ஆறு ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கான புதிய விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டுவர சட்டக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதர் மண்டி கிடக்கும் மாணவர் விடுதி

சேலம் சட்டக் கல்லூரியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக ரூ. 51 லட்சத்தில் விடுதி ஒன்று கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் சின்னகொல்லப்பட்டி கிராமத்தில் கடந்த 1984ஆம் ஆண்டு தனியார் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் அரசு இட ஒதுக்கீட்டில் படிக்கும் பட்டியலின பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் சேலம் நகரப்பகுதிகளில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் பட்டியலின மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில், அரசு இலவச விடுதி ஒன்றை கட்டித் தர வேண்டுமென்று சட்டக்கல்லூரி மாணவர் அமைப்பினர் 15 ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதற்கு பலனாக கடந்த 2005ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான 'தாட்கோ' சார்பில் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது . இதைத்தொடர்ந்து ஏற்காடு மலை அடிவாரப் பகுதியான கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் ரூ. 51 லட்சம் மதிப்பில் 2011ஆம் ஆண்டு விடுதி கட்டுவதற்கான பணிகள் தொடங்கி 2012-13ஆம் கல்வியாண்டில் பணிகள் முடிக்கப்பட்டன.

புதர் மண்டி கிடக்கும் மாணவர் விடுதி

தனியார் சட்டக் கல்லூரி நிர்வாகம் பட்டியலின மாணவர்களுக்கான இடங்களை ஒதுக்குவதில் குளறுபடி செய்ததால், இந்த விடுதி கடந்த ஆறு ஆண்டுகளாக திறக்காமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த விடுதியை திறக்கக் கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள், சமூக நல ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் விடுதி திறக்கபடாமல் இருப்பதால் சில சமூக விரோதிகள் அதை தவறாக பயன்படுத்துவதாகவும் மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விடுதியை திறக்க மாணவர்கள் கோரிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்ட தாட்கோ அலுவலர்களை செய்தியாளர்கள் தொடர்பு கொண்ட போது 'விடுதி பாழடைந்து இருப்பது உண்மைதான். அதை சீர் செய்ய தற்போது தமிழக அரசிடம் 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறோம். அந்த நிதி கிடைத்ததும் சீரமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு விடுதியை கொண்டுவருவோம்' என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை வனத்துறை விடுதியில் பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details