தமிழ்நாடு

tamil nadu

’’ராகுல் காந்தி விவகாரத்தை நீதிமன்றத்தில் தான் பேசவேண்டும், நாடாளுமன்றத்தில் அல்ல’’ - அமைச்சர் தர்ஷனா

By

Published : Mar 25, 2023, 7:40 PM IST

ராகுல் காந்தி பிரச்சினையை பேச வேண்டிய இடம் நீதிமன்றமே தவிர நாடாளுமன்றம் அல்ல என்று மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் தெரிவித்தார்.

rahul-gandhi-issue-should-be-discussed-in-court-and-not-in-parliament-minister-darshana
’’ராகுல் காந்தி விவகாரம், நீதிமன்றத்தில் தான் பேசவேண்டும் பாராளுமன்றத்தில் அல்ல’’ - அமைச்சர் தர்ஷனா

சேலம்: ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர், ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து கேள்விக்கு பதில் அளித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்தை வெளியிட்டார் எனக்கூறி, குஜராத் எம்.எல்.ஏ ஒருவர் சூரத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்த நீதிமன்றம், அதுவரை தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தது. அதைத்தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவி நீக்கம் செய்யப்படுவதாக நாடாளுமன்ற மக்களவை செயலகம் அறிவித்தது.

மக்களவை செயலகம் வெளியிட்ட அறிவிப்பில் ‘அரசியலைமைப்புச் சட்டத்தின் 102(1) e விதிகளின் படி, தண்டனை விதிக்கப்பட்ட தேதியிலிருந்து அதாவது 23 மார்ச் 2023 முதல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், "நான் சூரத் நகரில் இருந்து வந்திருப்பதால் இதற்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும். சூரத் நகரில் மோடி சமுதாயத்தினர் எண்ணற்றவர்கள் உள்ளனர்.

பிரதமரை இழிவுப் படுத்துவதாக நினைத்து ராகுல் காந்தி ஒரு பெரிய சமுதாயத்தினரையே இழிவுப்படுத்தி விட்டார். இது கண்டிக்கத்தக்கது. ஒரு சமுதாயத்தின் மீது ராகுல் காந்திக்கு ஏன் இவ்வளவு கோபம் இருக்கிறது எனத் தெரியவில்லை. அந்த சமுதாயத்தை திட்டியதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டமே காரணமாகும். ராகுல் காந்தி தன்னுடைய தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதற்கு இன்னும் ஒரு மாதம் கால அவகாசம் உள்ளது.

ஆனால் காங்கிரஸ் கட்சியினர் நீதிமன்றத்திற்குச் சென்று இதைப்பற்றி பேசாமல் நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தாக்கல் செய்யும் போது, அங்கு அமளியில் ஈடுபடுகின்றனர். ராகுல் காந்தி பிரச்சினைக்கு பேச வேண்டிய இடம் நீதிமன்றம் தானே தவிர நாடாளுமன்றம் இல்லை என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சீமான் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details