சேலம், தாதகாபட்டி பகுதியில் நேற்று (மார்ச்.24) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கூட்டணி வேட்பாளர்களான ஜி.வெங்கடாஜலம் (சேலம் வடக்கு), பாலசுப்பிரமணியன் (சேலம் தெற்கு), வீரபாண்டி (ராஜாமுத்து), கு.சித்ரா (ஏற்காடு), ஏ.பி.ஜெயசங்கரன் (ஆத்தூர்), நல்லதம்பி (கெங்கவல்லி) ஆகிய அதிமுக வேட்பாளர்கள், பாமக வேட்பாளர் இரா.அருள் (சேலம் மேற்கு) ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் தொலைநோக்குத் திட்டங்கள் மூலம் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. 2011ஆம் ஆண்டில் தொலைநோக்குத் திட்ட ஆவணம் வெளியிட்டு ”2023ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்” என அறிவித்தார்.
அதன்படி இதுவரை 6.5 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. மீதமுள்ள அனைவருக்கும் வரும் 2023ஆம் ஆண்டுக்குள் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் 25,000 ரூபாயும், பட்டதாரிப் பெண்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. மகளிருக்கு பேறுகால நிதியுதவித் திட்டத்தில் 18,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தாலிக்கு தங்கம் நான்கு கிராம் என்பதை எட்டு கிராமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கி வருகிறார்.
2011ஆம் ஆண்டுக்கு முன்பு திமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில் 45,000 கோடி ரூபாய் தொழில் முதலீடு பெறப்பட்டது. தற்போதைய அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 6.87 லட்சம் கோடி ரூபாய் தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.
19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தந்துள்ளோம். விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம், விதை ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. நெல் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. உணவு உற்பத்திக்காக மத்திய அரசின் விருதுகளை தொடர்ந்து பெற்றுவருகிறது.
அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல ஏழை பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம் 25,000 ரூபாய் என்பதை 35,000 ரூபாயாக உயர்த்தி தருவோம். கரோனா காலத்தில் நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதை பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார்.
திமுக, மத்தியிலும் மாநிலத்திலும் தொடர்ந்து 16 ஆண்டு காலம் ஆட்சி வகித்த நிலையில் தமிழ்நாட்டிற்கு எந்தவித உருப்படியான திட்டத்தையும் கொண்டு வரவில்லை. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது ஒரு அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி பெறுவது என்பதே கஷ்டமான சூழ்நிலையாக இருக்கும். ஆனால் மத்திய பாஜக அரசு, ஒரே ஆண்டில் தமிழ்நாட்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்துள்ளது. அதை மாநில அரசு நிறைவேற்றி வருகிறது.