தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 16, 2021, 5:58 PM IST

ETV Bharat / state

சேலத்தில் உரிய ஆவணங்களின்றி சிக்கிய 38.40 லட்சம், 36. 77 கோடி தங்கம், 89.58 கிலோ வெள்ளி!

சேலத்தில் இன்று (மார்ச். 16) காலை 8 மணிவரை, உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரொக்கம் ரூ. 38.40 லட்சமும், ரூ. 41.75 லட்சம் மதிப்பிலான 89.58 கிலோ வெள்ளிப் பொருள்களும், 90 சேலைகளும், ரூ. 36.77 கோடி மதிப்பிலான தங்கமும் பறக்கும் படை, பல்வேறு வகையான குழுக்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாவட்ட ஆட்சியர்
சேலம் மாவட்ட ஆட்சியர்

இது தொடர்பாக சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் கூறுகையில்,

"இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2021 அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்கும், வாகன சோதனைகளில் ஈடுபடுவதற்கும் பறக்கும் படை உள்ளிட்டப் பல்வேறு வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்திலுள்ள சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி, கெங்கவல்லி, ஏற்காடு, ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர் ஆகிய 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், மொத்தம் 99 பறக்கும் படைகள், 33 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 11 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்டப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

11 வீடியோ பார்வையிடும் குழுக்கள்

மேலும், 11 வீடியோ பார்வையிடும் குழுக்கள், கணக்குக் குழு, ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழு, ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்படும் ரொக்கம், பொருள்களுக்கான ஆவணங்களை சமர்ப்பித்த பின் அவற்றை ஆய்வுசெய்து விடுவிக்கும் குழு, 24x7 கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டு, தீவிரக் கண்காணிப்பு, ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், இந்தியத் தேர்தல் ஆணையம் ரூ. 50,000-க்கும் மேலான ரொக்கத்தினை எடுத்துச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால், உரிய ஆவணங்களோடு எடுத்துச்செல்ல வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதிலிருந்து பிப். 26 முதல் இன்றுவரை (மார்ச். 16), உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 38.40 லட்சமும், ரூ. 41.75 லட்சம் மதிப்புள்ள 89.58 கிலோ வெள்ளிப் பொருள்களும், 90 சேலைகளும், ரூ. 36.77 கோடி மதிப்புள்ள தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்படும் ரொக்கம், பொருள்களுக்கான ஆவணங்களை சமர்ப்பித்த பின் அவற்றை ஆய்வு செய்து, விடுவிக்கும் குழுவின் மூலமாக ஆவணங்கள் சரிபார்த்த பின்பு ரூ. 3.25 லட்சம் மதிப்புள்ள 4.850 கிலோ வெள்ளிப் பொருள்களும், ரூ. 4.99 லட்சம் ரொக்கமும் விடுவிக்கப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details