கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மத்திய பட்ஜெட் தாக்கலில், எல்ஐசி, ஐடிபிஐ ஆகிய நிறுவனங்களில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளைத் தனியாருக்கு விற்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது. மத்திய அரசுக்கான நிதி திரட்டும் நடவடிக்கையாக இந்த விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எல்ஐசி ஊழியர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று நாடு முழுவதும் எல்ஐசி ஊழியர்கள் ஒரு மணிநேரம் பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக சேலம் காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள தலைமை எல்ஐசி அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை அலுவலகப் பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.