சேலத்தில் உள்ள வீடுகளுக்கு குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மிக விரைவில் செயல்படுத்த உள்ளது.
இந்தத் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கும் பணி முழுவீச்சில் தற்போது நடைபெற்றுவருகிறது.
சிலிண்டர் எரிவாயு பயன்படுத்தும் நிலையை மாற்றி ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான எரிவாயுவை வீடுகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கும் திட்டத்தை தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுத்த முனைப்பு காட்டிவருகிறது.
இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இயற்கை எரிவாயு பயன்பாட்டை விரிவுபடுத்தவும் மத்திய அரசு நகர எரிவாயு விநியோக திட்டம் என்பதை தொடங்கி உள்ளது. இதற்காக சேலம் மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீடுகளுக்கு குழாய்கள் வழியாக இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணியைத் தொடங்கிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது சேலம் மாநகரில், சூரமங்கலம், சீலநாயக்கன்பட்டி , தாதகாப்பட்டி ஆகிய பகுதிகளில் சாலை ஓரங்களில் பிரதான குழாய்கள் அமைக்கும் பணியை முழுவீச்சில் செய்து வருகிறது.