சேலம்:சர்வதேச அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(ஜூலை28) முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் 180-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். சேலம் மாவட்டத்தில் அதனைப் பிரபலப்படுத்தும் வகையில், பல்வேறு விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்போட்டிகள் குறித்து சேலம் மாவட்டத்தில் பிரபலப்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சதுரங்கப் போட்டிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் கோலங்கள் வரைதல், சைக்கிள் மற்றும் நடைப்பேரணிகள், காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுக்கான செஸ் போட்டிகள், இருசக்கர வாகனப்பேரணிகள் உள்ளிட்ட விளம்பரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், பள்ளி வாகனங்கள், பேருந்துகள், ஷேர் ஆட்டோக்களில் ஒட்டு வில்லைகள், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னம் அடங்கிய ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்தல், மாவட்ட ஆட்சியரகத்தில் செல்ஃபி பாயிண்ட் அமைத்தல் மற்றும் வண்ண பலூன்களை பறக்க விடுதல், ஏற்காடு மலைச்சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச்சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து சுவர் ஓவியங்கள் வரைதல் போன்ற பல்வேறு விளம்பரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.