சேலத்தில் தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி அலுவலர்கள் சங்கம் சார்பில் 23ஆவது மாநில மாநாடு நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநில மாநாட்டில் தமிழ்நாடு அளவிலிருந்து வங்கி அலுவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டின் தொடக்கநாள் நிகழ்வுக்கு முன்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியாவில் பொதுத் துறை வங்கிகளை இணைப்பது பெரிய பொருளாதார ஆபத்தில் முடியும்.
இந்திய மக்களுக்கு பொதுத் துறை வங்கிகள் இன்னும் சேவை அளிக்க அதிக அளவிலான கிளைகள் தொடங்கப்பட வேண்டும். நாடு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வங்கிகளிலிருந்து ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய் கடனாகப் பெற்ற பெரிய முதலாளிகள் ஒன்பதாயிரத்து 630 பேர் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கடன் தொகையைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .