வெப்பசலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருவதால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் இந்தாண்டு அதிகளவில் நெல் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சேலத்தில் பெய்து வரும் கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி! - Salem District News
சேலம்: இடியுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் வயலில் உழவு செய்து நாற்று நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுபோலவே ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருவதால் அப்பகுதியில் உள்ள ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதுபோல ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நாள்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று சேர்வராயன் மலைப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக சரபங்கா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மேற்கு சரபங்கா நதி பகுதியிலுள்ள லோகூர், டேனிஸ்பேட்டை, கோட்டை, குள்ளமுடையான் ஏரி, கோட்டேரி ஆகியவை நிரம்பியுள்ள நிலையில் பண்ணப்பட்டி ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது.