தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 28, 2021, 1:01 PM IST

ETV Bharat / state

மக்களை திசை திருப்ப திமுக முயற்சி - எடப்பாடி பழனிசாமி

மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது திமுக பொய் வழக்கு போடப்படுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்களை திசை திருப்ப திமுக முயற்சி
மக்களை திசை திருப்ப திமுக முயற்சி

சேலம்:சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜூலை. 28) நடைபெற்று வருகிறது. சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என எழுதப்பட்டிருந்த பதாகைகளை கையில் ஏந்தியபடி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கோரிக்கைகளை திமுக நிறைவேற்றவில்லை

தொடர்ந்து செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, " கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது 505 அறிவிப்புகளை திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த நீட் தேர்வு, கல்வி கடன் ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின் கணக்கீடு உள்ளிட்ட எந்த கோரிக்கைகளையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.

கண்துடைப்புக்காகவே ஆணையம்

குறிப்பாக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசினார். ஆனால் அதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கண்துடைப்புக்காகவே ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு மாணவர்களையும் பெற்றோரையும் தொடர்ந்து குழப்பி வருகிறது.

மக்களை திசை திருப்ப திமுக முயற்சி

தமிழ்நாடு முழுவதும் போராட்டம்

சட்டப்பேரவையில் இதுகுறித்து கேட்டதற்கு மழுப்பலான பதிலே கிடைத்தது. அப்போது தெரிவித்திருந்தால் கூட மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி இருப்பார்கள். ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் திமுக அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதால்தான் போராட்டம் நடத்தப்படுகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துகிறோம்.

அடிக்கடி மின்வெட்டு

அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும். மின் கணக்கீட்டு முறையில் ஏகப்பட்ட குளறுபடி நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள், இதனை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.

பொய் வழக்கு

மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மீது திமுகவினர் பொய் வழக்கு போட்டு கொண்டு இருக்கிறார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து மக்கள் கொந்தளிப்போடு இருக்கிறார்கள். கேள்வி கேட்க மக்கள் ஆரம்பித்து விட்டார்கள். அரசியல் காழ்புணர்ச்சிக்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு, பொய் வழக்கு போடும் ஸ்டாலின் அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

மக்கள் பிரச்னைக்கு குரல்

மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் இருப்பதை மறந்துவிடக் கூடாது. அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிக்காகவே கடன் வாங்கப்படுகிறது. இதனை கடன் என்ற நோக்கில் பார்க்காமல் முதலீடாகவே பார்க்கவேண்டும். நூற்றுக்கு அறுபது விழுக்காடு கடன்கள் வளர்ச்சி பணிகளுக்காக வாங்கப்பட்டுள்ளன.

சாதிவாரி கணக்கெடுப்பு

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினருக்கும் உரிய முறையில் இட ஒதுக்கீடு கிடைக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும். ஊடகங்கள் ஆளுங்கட்சிக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை எதிர் கட்சிக்கும் அளிக்க வேண்டும், அப்போதுதான் மக்களுக்கான கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும்" என்றார்.

இதையும் படிங்க:வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீடு இந்தாண்டு அமல்?

ABOUT THE AUTHOR

...view details