தமிழ்நாடு

tamil nadu

'வேட்பாளர்கள் விளம்பரம் செய்ய அனுமதி பெற வேண்டும்' - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

By

Published : Mar 11, 2021, 8:22 AM IST

சேலம் : தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்னர் மாவட்ட ஊடக சான்றளிப்பு கண்காணிப்புக் குழுவில் அனுமதி பெற்று, அந்த அனுமதி எண்ணுடன் விளம்பரங்களை வெளியிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் அறிவித்துள்ளார்.

district-election-officer-announced
district-election-officer-announced

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டபேரவை பொதுத் தேர்தல் 2021ஐ முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டபேரவைத் தொகுதிகளிலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர செலவினங்களைக் கண்காணித்து, கணக்கிட்டு, தேர்தல் செலவு கணக்கீட்டாளருக்கு நாள்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனைக் கண்காணிப்பதற்கும், தேர்தல் விளம்பர செலவினங்களை கணக்கிடுவதற்கும், சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலர் தலைமையில் ஊடக சான்றளிப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, அக்குழு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 128இல் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலத்தில் செயல்பட்டு வருகின்றது. மேலும், தொலைக்காட்சிகள், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளை கண்காணிப்பதற்கும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான செய்திகளோ, அனுமதி பெறாத விளம்பரங்களோ வெளியிடப்படுகின்றதா என்பதைக் கண்காணிப்பதற்கும் இவ்வலுவலக முன் அறையில் ஊடக கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு அதில் 10க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அவர்களை சார்ந்தோர்கள் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகள், எப்.எம் ரேடியோக்களில் விளம்பரம் செய்ய விரும்புவோர் அவ்விளம்பரத்தினை வெளியிடுவதற்கு முன் ஊடகச் சான்றளிப்பு, கண்காணிப்புக் குழுவிற்கு விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்று, அந்த அனுமதி எண்ணுடன் விளம்பரம் வெளியிட வேண்டும்.

அவ்வாறு தேர்தல் தொடர்பான விளம்பரங்களை நாளிதழ்கள், வார இதழ்கள், இரு வார இதழ்கள், மாத இதழ்கள் உள்ளிட்ட பருவ இதழ்களில் வெளியிட விரும்புவோர் அவ்விளம்பரங்களின் இரண்டு நகல்களையும், ஒளி / ஒலி விளம்பரமாக இருந்தால் பென்டிரைவ், சிடியில் பதிவு செய்து இரண்டு செட்களையும் இணைத்து, விளம்பரம் தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டதற்கான செலவினத் தொகைக்கான பட்டியல், விளம்பரம் வெளியிடும் தொலைக்காட்சி, நாளிதழ்களின் விளம்பர கட்டண பட்டியல் உள்ளிட்டவைகளை உரிய படிவத்துடன் இணைத்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண்.128-இல் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவில் விளம்பரம் வெளியிடுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதனை ஊடக சான்றளிப்பு, கண்காணிப்புக் குழு பார்வையிட்டு ஊடக சான்றளிப்பு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெற்று சான்றிதழ் வழங்கப்படும். அச்சான்றிதழ் பெறப்பெற்ற விளம்பரங்கள் மட்டுமே நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், உள்ளூர் தொலைக்காட்சிகள், எப்.எம்,ரேடியோக்களில் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும். உரிய அனுமதி பெறாமல் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவது கண்டறியப்பட்டால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கருதி சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குஷ்பூவின் கனவு கலைந்ததா..? சேப்பாக்கத்தில் பாமக போட்டி

ABOUT THE AUTHOR

...view details