சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அரசு சார்ந்த கூட்டுறவு நிறுவனமாக செயல்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை விவசாய பால் உற்பத்தியாளர்களை முன்னேற்றும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சேலம் ஆவின் நிறுவனம் 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 715 பிரதான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 42 ஆயிரத்து 750 பால் உற்பத்தியாளர்களிடமிருந்து 102 பால் கொள்முதல் வழிதடங்கள் மூலமாக தினசரி 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது .
உள்ளூர் மற்றும் சென்னை போன்ற பெருநகர விற்பனையையடுத்து மீதமுள்ள பாலில், தயிர், வெண்ணை, பால் பவுடர் , நெய், இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் போன்ற பால் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்காக விநியோகிக்கப்பட்டுவருகிறது . இதன் மூலம் கிடைக்கும் வருவாயானது கிராமப்புறங்களில், பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களில் பால் ஊற்றும் ஏழை விவசாயிகளின் பொருளாதாரம் மேம்பாடு அடைய, அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுவருகிறது.