தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டியலின இளைஞரை சாதி குறித்து இழிவாகப்பேசிய ஊராட்சி மன்றத்தலைவர் - தன்னிலை விளக்கம்

கோயிலுக்கு சென்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞரை ஊராட்சிமன்றத் தலைவர் பதவி வகித்து வரும் திமுக ஒன்றியச் செயலாளர் சாதிய ரீதியாக தரக்குறைவாக பேசும் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதையடுத்து ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க விசிகவினர் புகார் அளித்துள்ளனர். அதற்கு அவர் மறுப்புத்தெரிவிக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.

Complaint against panchayat president for using caste derogatory words on youth
இளைஞரை சாதி ரீதியாக இழிவாக பேசிய ஊராட்சிமன்ற தலைவர் மீது புகார்

By

Published : Jan 30, 2023, 8:49 PM IST

பட்டியலின இளைஞரை சாதி குறித்து இழிவாகப்பேசிய ஊராட்சி மன்றத்தலைவர் - தன்னிலை விளக்கம்

சேலம்:சிவதாபுரம் அடுத்த திருமலைகிரி ஊராட்சி பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த வியாழக்கிழமை இரவு கோயில் நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது அங்கு சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன பிரிவைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் போதையில் சென்று உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த திருமலைகிரி ஊராட்சிமன்றத் தலைவர் மாணிக்கம் அங்கு சென்று பிரவீனை கண்டித்ததாகவும், அப்போது சாதி குறித்து தகாத வார்த்தையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக தமிழக அளவில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இரும்பாலை போலீசார் திருமலைகிரி ஊராட்சிக்கு சென்று பட்டியலின மக்கள் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர் மாணிக்கம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது இருதரப்பும் சமாதானம் செய்து கொண்டதாகவும் பிரச்சனை எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்று இரு தரப்பினரும் விரும்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் திருமலைகிரி ஊராட்சி ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்த விசிக மாநில தொண்டரணி செயலாளர் இமயவரம்பன், இளைஞர் பிரவீன் மற்றும் அவரின் தந்தை செந்தில்குமார் ஆகியோரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இமயவரம்பன், ”கடந்த நூற்றாண்டுகளாக இந்த பகுதியிலே நிலவி வந்த சாதிய சமூக கொடுமைகள், கடந்த சில வருடங்களாக தீர்க்கப்பட்டு அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக அண்ணன் தம்பி போல் பழகி வருகின்றனர்.

இதுபோன்ற சூழலில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு இளைஞர் ஒரு பகுதியிலே இருக்கின்ற அம்மன் ஆலயத்திற்குச் சென்று இருக்கிறார். அதற்கு திமுகவினுடைய ஒன்றிய கழகச் செயலாளர் மாணிக்கம் அவர்கள், தம்பியிடம் தகாத வார்த்தைகளால் பேசி மிகவும் புண்படுத்தி இருக்கிறார்.

இந்த நேரத்திலே விடுதலைக்குச் சிறுத்தைகள் சார்பில் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்னவென்றால் தமிழகத்தில் நல்லாட்சி வழங்கிக் கொண்டிருக்கின்றார், தளபதியார். அவர்களுடைய ஆட்சியிலே இந்த விரும்பத்தகாத சம்பவம் என்பது பட்டியலின மக்கள் அனைவருக்குமே மிகுந்த மன வருத்தத்தை தருகின்றது. எனவே உடனடியாக தமிழக அரசும் காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

இதுவரைக்கும் அந்த தம்பி என்ன சொல்கிறார் என்றால் போலீஸ் நடவடிக்கை வேண்டாம், மாணிக்கம் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டால் மட்டும் போதும் என்று சொல்லுகிறார்” என்று தெரிவித்தார்.

காழ்ப்புணர்ச்சியால் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்:திருமலைகிரி ஊராட்சிமன்றத் தலைவர் மாணிக்கம், பட்டியல் இன இளைஞரை சாதி குறித்து தரக்குறைவாக பேசியதாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ஊராட்சிமன்றத் தலைவர் மாணிக்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மாரியம்மன் கோயில் பண்டிகையில் இளைஞர் ஒருவர் போதையில் தகராறு செய்வதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்து அப்போது அந்த இளைஞரைக் கண்டித்தேன். தவறுதலாக சில வார்த்தைகளை கூறிவிட்டேன்.

அதன் பிறகு அந்த இளைஞரின் உறவினர்கள் என்னிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பினரும் சமாதானம் ஆகிக்கொண்டோம். ஆனால், என்னையும் கட்சியையும் பிடிக்காதவர்கள் வேண்டுமென்றே வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். இது குறித்து காவல்துறையினர் பலமுறை விசாரணை நடத்தி, ஊராட்சிமன்றத் தலைவர் மீது புகார் தர மாட்டோம் என்று இளைஞன் பிரவீனும் அவரது பெற்றோரும் கூறிவிட்டனர். அவரின் உறவினர்களாகிய ஊர் பெரியவர்களும் கூறிவிட்டனர்.

இந்த நிலையில் வீடியோ வலைத்தளங்களில் பரவுவதால் அது எனக்கும் கட்சிக்கும் அவப் பெயர் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று தெரிகிறது. அதனால், நானும் நடவடிக்கை எடுப்பேன். பட்டியல் இன மக்களின் வளர்ச்சிக்காக நான் இரவும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார். கடந்த ஐந்து நாட்களாக இந்த பிரச்னை திருமலைகிரி ஊராட்சிப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் இரும்பாலை போலீசார் அந்தப் பகுதியில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சென்னை வரும் வட இந்தியத் தொழிலாளர்கள் என்ன செய்கின்றனர்? - கண்காணிக்க கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details