தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய வெள்ளரிவெள்ளி ஏரி - நேரில் பார்வையிட்ட முதலமைச்சர்! - Chief Minister visited the Vellari Velli Lake

சேலம்: எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி ஏரி, 40 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளதால், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.

வெள்ளரிவெள்ளி ஏரி

By

Published : Nov 9, 2019, 7:26 PM IST

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி ஏரி 52 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரிக்குத் தண்ணீர் வரவில்லை எனும் காரணத்தினாலும், பருவ மழையும் சரியாகப் பெய்யாததாலும், ஏரி முழுமையாக வறண்டு காட்சியளித்துள்ளது.

இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் அமைச்சராக இருந்த தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர், கடந்த 2016ஆம் ஆண்டு 75 லட்சம் ரூபாய் மதிப்பில் மேட்டூர் அணை கிழக்கு கடற்கரை கால்வாயிலிருந்து, வெளியேறும் உபரி நீரைக் குழாய் மூலம் கொண்டு வந்து, அந்த தண்ணீரை விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தும் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

எனவே, மூன்று ஆண்டுகளாகக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த வெள்ளரிவெள்ளி ஏரி நீர்மட்டம் நேற்று அதன் முழுக் கொள்ளளவை எட்டி கரையில் தண்ணீர் வழிந்து ஓடியது . இதைப் பார்த்த அப்பகுதி விவசாயிகள், கண்ணீர் மல்க இறை வழிபாடு நடத்திக் கிடா வெட்டி மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள் .

இந்நிலையில், சேலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கொங்கணாபுரம் பகுதியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். அப்போது இந்த தகவலறிந்து, வெள்ளரிவெள்ளி ஏரியை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏரியில் மலர்த் தூவி மகிழ்ந்தார். பின்பு அதிகாரிகளிடம் பேசிய முதலமைச்சர், ’ஏரியில் நீர் ரொம்ப தெளிவாகவும் சுத்தமாக இருக்கிறது. தொடர்ந்து பராமரிப்புப் பணி செய்து ஏரியை விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் செல்லும் வகையில் திட்டத்தை வகுக்க வேண்டும்’ என ஆலோசனை தெரிவித்தார்.

வெள்ளரிவெள்ளி ஏரி

இந்நிகழ்வில், எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் மற்றும் அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

இதை படிங்க: அயோத்தி தீர்ப்பு: சட்ட ஒழுங்கு நிலை குறித்து மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா ஆலோசனை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details