சேலம்: தேனி பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் பி.மிலானி. இவர் தேனி மாவட்டத்தில் திமுக முன்னாள் மாணவர் அணி அமைப்பாளராக இருந்தவர். தற்போது தேனியில் அரசியல் பிரமுகராக செயல்பட்டு வருகிறார்.
இவர் கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் போது வேட்பு மனுவில் தவறான தகவல் அளித்ததாக, சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-க்கு ஆன்லைன் மூலம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் மனு அளித்தார்.
அதில், "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவுகள் 33 மற்றும் 33 ஏ-ன்படி தனது வேட்பு மனுவின் போது பிரமாண பத்திரத்தில் ஆண்டு வருமானம், அசையா சொத்துகள், கடன் விவரங்கள் குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளாக" தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த ஆன்லைன் புகார் மனு குறித்து விசாரித்த சேலம் குற்றவியல் நடுவர் எண் -1 நீதிமன்றம், மனு குறித்து சேலம் மத்தியக்குற்றப் பிரிவு வழக்கை விசாரித்து, போதிய முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும், அதுகுறித்த அறிக்கையை மே 26 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்றும், விசாரணையின் போது மனுதாரருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி உத்தரவிடப்பட்டிருந்தது.