சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் வின் ஸ்டார் என்ற பெயரில் மனை வணிகம் (ரியல் எஸ்டேட்) நிறுவனத்தைத் தொடங்கி கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்து, பொதுமக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, நிலத்தை கிரயம் செய்து கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
நிதி நிறுவனம், நெல்லிச்சாறு பானம், ஜவுளி எனப் பல்வேறு தொழில்களை நடத்தி பொதுமக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். அதிமுக பிரமுகரான இவரிடம் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் சேலம் மாநகர காவல் துறையினரிடம் சிவக்குமார் குறித்து புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், 2016ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட சிவக்குமார் தற்போது பிணையில் இருந்துவருகிறார்.
பொதுமக்களுக்கு தர வேண்டிய பணத்தைத் தராமலும், அவரின் பெயரில் உள்ள சொத்துகளை விற்றுவந்ததும் தெரியவந்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக சிவக்குமார் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் தினந்தோறும் கையெழுத்திட வேண்டும். ஆனால், கடந்த பத்து நாள்களாகக் காவல் நிலையத்திற்கு வராமல், காவல் துறையினர் அவர் இருக்கும் இடத்திற்குச் சென்று கையொப்பம் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.