சேலம் மாவட்டம், மல்லூர் அருகேயுள்ள சந்தியூர் அடுத்த ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் மணி (58). இவரது மனைவி சாந்தா (50). இவர் மரவள்ளிக்கிழங்கு மாவு வாங்கி வியாபாரம் செய்து வந்தார். சாந்தா பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிமுக மகளிர் அணியின் தலைவியாகவும், பெரமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை சாந்தா தனது இருசக்கர வாகனத்தில் ஆட்டையாம்பட்டி அருகே சென்ற போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை வழிமறித்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியும், தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு சராமரியாகத் தாக்கியுள்ளார்.
அப்போது, அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த அடையாளம் தெரியாத நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில், படுகாயமடைந்த சாந்தாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.