சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பாலசுப்பிரமணியன், இணை இயக்குநராக அவரது மகன் வினோத் குமார், நிர்வாக இயக்குநராக சுப்பிரமணி ஆகியோர் பொறுப்பில் உள்ளனர். இவர்கள் தங்களது நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனப் பொதுமக்கள் மத்தியில் விளம்பரம் செய்தனர். இதை நம்பி சேலம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.
இதனிடையே சிவா என்பவர் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், "சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள முதலீட்டு நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 20 ஆயிரம் ரூபாய் தருவதாகத் தெரிவித்தனர். இதையடுத்து பணத்தை முதலீடு செய்தேன். ஆனால், இதுவரை மாதாந்திர தொகையை திருப்பித் தரவில்லை. மேலும், எனக்கு கமிஷன் தொகை தருவதாகக் கூறியதால் தெரிந்த 80 பேரையும் அறிமுகம் செய்து வைத்துள்ளேன். ஆனால், அந்த கமிஷன், அவர்களுக்கான மாதாந்திர தவணை தொகை ஆகியவை வழங்கப்படவில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.