தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் தொடங்கியது! - ரேஷன் கடை

Pongal Gift Token: ராணிப்பேட்டை மாவட்டத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணத்திற்கான டோக்கன் வழங்கும் பணி இன்று (ஜன.7) தொடங்கியது.

Pongal Gift Token
ராணிப்பேட்டையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 1:21 PM IST

ராணிப்பேட்டை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கான பரிசுத் தொகுப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு ஆகியவை கொள்முதல் செய்வதற்கான அரசாணை கடந்த ஜன.1 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது.

அதில் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 42 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை கொள்முதல் செய்ய, மொத்தமாக 238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 ரூபாய் ஒதுக்கப்பட்டு, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதனிடையே அரசின் அறிவிப்பில், பொங்கல் பரிசுத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதனை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு விடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு பல்வேறு ஆலோசனைக்குப் பிறகு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வருகிற 9ஆம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அன்றைய தினமே தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும், ரூ.1,000 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், வழக்கம்போல் பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் முறை பின்பற்றப்பட உள்ளது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்தெந்த தேதியில் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டு, டோக்கன் வழங்கும் பணி இன்று (ஜன.7) தமிழகம் முழுவதும் தொடங்கியது.

அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் நவ்லாக் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்களை வழங்கினர்.

இதையும் படிங்க:கும்பகோணம் தனியார் பள்ளியில் களைகட்டிய சமத்துவப் பொங்கல்!

ABOUT THE AUTHOR

...view details