தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 7, 2023, 7:50 PM IST

ETV Bharat / state

அரக்கோணம் ரயில் நிலையத்தில் சினிமா பாணியில் சண்டை; தடுக்காமல் ரயில்வே போலீசார் அலட்சியம்!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் சினிமா பாணியில் ஒருவர் மற்றொருவரை அடித்து துன்புறுத்தும் சம்பவமும், அதைத் தடுக்க வராத ரயில்வே காவல் துறையினரின் அலட்சியப் போக்கும் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் சினிமா பாணியில் சண்டை
அரக்கோணம் ரயில் நிலையத்தில் சினிமா பாணியில் சண்டை

அரக்கோணம் ரயில் நிலையத்தில் சினிமா பாணியில் சண்டை

ராணிப்பேட்டை: அரக்கோணம் ரயில் நிலையத்தில், ரயிலுக்கு அருகே ஒரு நபர் மற்றொரு நபரை மோசமாக அடித்து துன்புறுத்துவதும், அதைத் தடுக்க ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வராமல் இருந்ததும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் காவல் துறையினர் இத்தகைய நிகழ்வின்போது எங்கு சென்றிருந்தனர் என்னும் கேள்வியை எழுப்புகிறது.

அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே காவல் நிலையங்கள் உள்ளன. இவர்கள் ரயில் நிலையங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். மேலும் ரயில் பெட்டிகளை சோதனை செய்யவும், பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொதுவாக ரயில் நிலையங்களில் குற்றச் சம்பவம், அடிதடி போன்ற குற்றச்செயல்கள் நடைபெறுவது மிகவும் அபூர்வம். ஆனால், அரக்கோணம் ரயில் நிலையத்தில் இது போன்ற காட்சிகள் அவ்வப்போது நடைபெற்று பயணிகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது அரக்கோணம் ரயில் நிலையம் 6ஆம் நடை மேடையில், மின்சார ரயிலை இயக்க ஓட்டுநர் தயாராக நின்று கொண்டிருந்தபோது, ரயிலின் அருகே நடைமேடையில், ஒரு நபர் மற்றொரு நபரை அடித்து துன்புறுத்தும் சம்பவம் நிகழ்ந்தது. இது ஏதோ பட சூட்டிங்காக நடைபெற்ற காட்சி என பயணிகள் நினைக்க, அடி வாங்கும் நபர் விட்டுவிடு விட்டுவிடு என மரண ஓலம் விட, இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரயில் ஓட்டுநர் என்ன செய்வது என அறியாமல் திகைத்து நின்றார்.

அந்த நபரைக் காப்பாற்ற எந்த ஒரு ரயில்வே காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. ரயில் நிலைய போலீசார் ரோந்துப் பணியில் இல்லாததால், இத்தகைய சம்பவம் நிகழ்வதாக பயணிகள் குற்றம்சாட்டினர். பின்னர் தன்னைக் காப்பாற்ற எவரும் இன்றி தவித்த அந்த நபர், வலியால் பெரும் துன்பத்திற்கு ஆளானார். அவரது நிலை கண்ட அங்கிருந்த சில பயணிகள், சத்தம் போட்டு அடிக்கும் நபரை விரட்டி, காயமடைந்த நபரை மீட்டனர்.

இந்தச் சம்பவம் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரக்கோணம் ரயில் நிலையத்தின் பயணிகள் இத்தகைய அவல நிலை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதுபோன்ற சம்பவங்கள் இங்கு அவ்வப்போது நடைபெறுவதாகவும், இதை ரயில்வே போலீசார் கண்டுகொள்வதில்லை எனவும் சில பயணிகள் குற்றம்சாட்டினர்.

மேலும் போலீசார் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்களா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க தவறுவதாகவும், அதனால் தான் இத்தகைய சம்பவம் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது என்றும் பயணிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

எனவே மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும்; ரோந்து பணியில் ஈடுபடாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க:Falaknuma Express : தெலங்கானாவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தீக்கிரை - உயிர்ச்சேதம் இல்லை

ABOUT THE AUTHOR

...view details