ராமநாதபுரம்:ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஜனவரி 9 அன்று கடலுக்குச் சென்ற தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கிருபை என்பவரது விசைப்படகையும் அதிலிருந்த கிருபை, வளன் கவுசிக், மிக்கேயாஸ், சினிங்ஸ்டன், சாம்ஸ்டில்லர், மிஜான், பிரைட்டன், கிஷோக், மாரி ஆகிய 9 மீனவர்களை இலங்கை எல்லைக்குள் மீன் பிடித்தாக அந்நாட்டு கடற்படையினர் கைதுசெய்தனர்.
நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! - ராமநாதபுரம் செய்திகள்
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை, நிபந்தனையுடன் விடுதலை செய்து ஊர் காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனைக்குப் பின்னர், கரோனா தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர். இச்சூழலில் இன்று ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் இவ்வழக்கு நீதிபதி அந்தோணிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 9 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும், இவர்களின் விசைப்படகினை இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின் கீழ் அரசுடைமையாக்கப்படுகிறது என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விமானம் அல்லது கடல் வழியாகத் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.